இந்தியாவுக்குள் நுழையும் அகதிகள்.. எல்லைப் பகுதியில் வேலி.. தடுத்த வங்கதேச வீரர்களால் பதற்றம்
கொல்கத்தா: வங்கதேசத்தில் கலவரம் தீவிரமடைந்ததால் சிறுபான்மையினர் இந்தியாவுக்குள் அகதிகளாக நுழைந்து வருகின்றனர். இந்திய எல்லைப் பகுதிகளில் வேலி அமைக்கும் முயற்சியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வந்த நிலையில், வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படையினர் எதிர்ப்புத் தெரிவித்து தடுத்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போரில் பங்கேற்று உயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. கடந்த 2018 இல் மாணவர்களின் போராட்டம் காரணமாக இந்த முறை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், 30 சதவீத இடஒதுக்கீடு முறை மீண்டும் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். இது பாரபட்சமான செயல் என்று கூறி மாணவர்கள் மத்தியில் போராட்டம் வெடித்தது. இப்போராட்டம் மாணவர்கள் மற்றும் போலீசாரிடையேயான வன்முறையாக மாறியதில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டு, ராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர். தொடர்ந்து, மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாகி ஷேக் ஹசீனாவுக்கு எதிராக திரும்பியது. இதையடுத்து தான் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தற்காலிகமாக அடைக்கலம் அடைந்துள்ளார்.
தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 16 பேர் இடம்பெற்றுள்ளனர். இடைக்கால அரசின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனிஸ் செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே தான் ஷேக் ஹசீனாவை மீண்டும் வங்கதேசத்துக்கு இந்தியா அனுப்பி வைக்க வேண்டும். ஷேக் ஹசீனாவை இந்தியா உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று அடுத்தடுத்து கோரிக்கைகள் வருகின்றன.
வங்கதேசத்தில் கலவரம் தீவிரமடைந்த நிலையில் சிறுபான்மையின மக்கள் இந்தியாவுக்குள் அகதிகளாக நுழைந்து வருகின்றனர். இதைத் தடுப்பதற்காக எல்லையில் இந்தியா பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, எல்லையில் உள்ள சில பகுதிகளில் வேலி அமைக்கும் பணியில் இந்தியப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து வங்கதேசப் படையினர் வேலி அமைப்பதை தடுத்துள்ளனர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், இந்திய ராணுவப் படை வேலி அமைக்க வங்கதேசப் படையினர் எதிர்ப்புத் தெரிவித்து தடுத்தனர். இருப்பினும் இருதரப்புக்கும் இடையே எந்தவிதமான தாக்குதல் சம்பவங்களும் ஏற்படவில்லை என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications