தேவகவுடா கட்சியோடு இணைந்து பெங்களூர் மாநகராட்சியை கைப்பற்ற துடிக்கும் சித்தராமையா!
பெங்களூர்: ம.ஜ.த கட்சியுடன் கூட்டணி வைத்து பெங்களூர் மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டணிக்கு ஒப்புதல் பெறுவதற்காக முதல்வர் சித்தராமையாவை விரைவில் டெல்லி சென்று மேலிடத் தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்த பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளில் பாஜகவும், 76 இடங்களில் காங்கிரசும், 14 இடங்களில் ம.ஜ.தவும் வென்றன. சுயேச்சைகள் 8 வார்டுகளில் வெற்றிக்கொடி நாட்டினர். அதில், ஒரு சுயேச்சை பிற்பாடு பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், மேயர் பதவியை தேர்ந்தெடுக்க விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் கவுன்சிலர்கள் மட்டுமின்றி, பெங்களூர் நகர தொகுதிகளை சேர்ந்த 28 எம்.எல்.ஏக்கள், மற்றும் மக்களவை, மாநிலங்களவையை சேர்ந்த தலா 3 எம்.பிக்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாகும்.
கடந்த முறை நடந்த மேயர் தேர்தலின்போது, மேயரை தேர்ந்தெடுக்க 128 வாக்குகள் தேவை என்ற நிலை இருந்தது. ஆனால் இம்முறை, எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பலத்தின் அடிப்படையில் அது 131 வாக்குகளாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், அனைத்தையும் கூட்டினாலும் பாஜகவிடம் இருப்பது 126 வாக்குகள்தான்.
காங்கிரசிடம் 101 வாக்குகளும், ம.ஜ.தவிடம் 21 வாக்குகளும் உள்ளன. ஏற்கனவே சுயேச்சைகளில் ஒருவர் பாஜகவில் இணைந்துவிட்டார். எனவே இன்னும் எஞ்சியுள்ள 7 சுயேச்சைகளையும் தன்பக்கம் இழுக்க வேண்டிய நிர்பந்தத்தில் காங்கிரஸ் உள்ளது.
ம.ஜ.தவுடன் கூட்டணி வைக்க கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோஷ்டி எதிர்ப்பு தெரிவித்தாலும், முதல்வர் சித்தராமையா இதில் உறுதியாக உள்ளார். ம.ஜ.த தலைவர் தேவகவுடாவுடன், சித்தராமையாவுக்கு ஏழாம் பொருத்தம்தான் என்றாலும், அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இருவரும் நெருங்குகிறார்கள்.
இந்நிலையில் விரைவில் சித்தராமையா டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணை தலைவர் ராகுல்காந்தி மற்றும் உயர் மட்ட தலைவர்களை சந்தித்து பேசி, கூட்டணிக்கு ஆதரவு திரட்ட உள்ளார்












Click it and Unblock the Notifications