பெங்களூருவில் வீடுகளுக்கான சொத்து வரி உயர்வு - வரும் நிதியாண்டிலிருந்து அமலுக்கு வருகிறது!
பெங்களூரு: பெங்களூருவில் வீடு, வர்த்தக கட்டிடங்களுக்கான சொத்து வரியானது வருகின்ற 2016-17ஆம் நிதி ஆண்டிலிருந்து உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி செலுத்த தகுதியானவை என 16 லட்சம் கட்டிடங்கள், வீட்டு மனைகள் இருப்பதாக மாநகராட்சி புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இருந்தாலும் கூட வரிவசூல் குறைவாக உள்ளது. காரணம், பெரும்பாலானவர்கள் வர்த்தக கட்டிடங்களை வைத்துக் கொண்டு அதை குடியிருப்பு கட்டிடங்கள் எனக்கூறி மாநகராட்சிக்கு குறைந்த அளவில் சொத்து வரி செலுத்தி வருகிறார்கள்.
இதனால், பெங்களூரு மாநகராட்சி நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. நிதி பற்றாக்குறையை சமாளிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சொத்து வரி செலுத்துவதில் ஏற்படும் மோசடியை தடுக்கும் வகையில் சொத்துகளின் சரியான பட்டியல் தயாரித்து அதன் அடிப்படையில் சொத்து வரி வசூலிக்கவும், மாநகராட்சி பகுதிகளில் சொத்து வரியை உயர்த்தவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கர்நாடக மாநகராட்சி குற்றவியல் சட்டத்தின் படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 5 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், பெங்களூரு மாநகராட்சி, பெங்களூரு பெருநகர மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட 2008 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை மாநகராட்சியில் உள்ள வீடு, வர்த்தக கட்டிடங்களின் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில், வீடு, வர்த்தக கட்டிடங்களின் சொத்து வரியை தற்போது உயர்த்த மாநகராட்சி மேயர் மஞ்சுநாத் ரெட்டி முடிவு செய்தார். அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அறிக்கைக்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கைப்படி, சுமார் 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வீடு, வர்த்தக கட்டிடங்களில் சொத்து வரி அதிகரிக்கப்பட உள்ளது. கர்நாடக மாநகராட்சி குற்றவியல் சட்டப்படி, 2008 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 3 முறையாவது சொத்து வரி உயர்த்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இது நடைபெறவில்லை. ஆகவே இதை ஒரே தவணையில் உயர்த்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது பெங்களூரு நகர மக்களுக்கு பெரும் நிதி சுமையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய சொத்து வரி உயர்வு 2016-2017 ஆம் நிதி ஆண்டு முதல் அமலுக்கு கொண்டு வர மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சொத்து வரி உயர்வு திட்ட அறிக்கைப்படி குடியிருப்பு பகுதிகளில் உள்ள சொத்துகளுக்கு 20 சதவீதம் வரையும், குடியிருப்பு இல்லாத பகுதிகளில் உள்ள சொத்துகளுக்கு 25 சதவீதம் வரையும், முறையாக சொத்து வரி செலுத்த தவறியவர்களின் சொத்துகளுக்கு 30 சதவீதம் வரையும் சொத்து வரி உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.