திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம்
முதல்வர் விஜய் அண்மையில் டெல்லி சென்று வந்தார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அத்துடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். பிரதமர் மோடியிடம் விஜய் மதுரை,கோவை, ஓசூர் மெட்ரோ ரயில், காவிர் நீர் உள்பட பல்வேறு முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அளித்திருந்தார். இந்தசூழலில் முதல்வர் விஜய்யின் முதல் டெல்லி பயணம் தோல்வியில் முடிந்துவிட்டதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி விமர்சனம் செய்துள்ளது.
முரசொலியில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: "விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டது முதல், 'விஜய் நாளை டெல்லி பயணம்' என்ற செய்தியை தினந்தோறும் தமிழ்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வந்தன. அவருக்காக டெல்லி காத்திருப்பதைப் போன்ற பிம்பத்தை உருவாக்க இவர்கள் திட்டமிட்டார்கள். விஜய்யைவிட அதிகமாகவே இவர்கள் கூவினார்கள்.

இருபது நாட்கள் கழித்துத்தான் அவருக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. பிரதமரைச் சந்திக்கிறார், உள்துறை அமைச்சரைச் சந்திக்கிறார், நிதி அமைச்சரைச் சந்திக்கிறார், சோனியாவைச் சந்திக்கிறார், ராகுலைச் சந்திக்கிறார் என்று இரண்டு நாட்களுக்காக பயணத்திட்டத்தை ஊடகங்கள் வெளியிட்டன. 'இது மரியாதை நிமித்தமான பயணம் மட்டுமல்ல; மரியாதையை உயர்த்தப் போகும் பயணம்' என்றெல்லாம் ஊடகங்கள் அதிகமாக அலப்பறைகள் செய்தன. இவை எதுவும் நடக்கவில்லை.
பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார் முதலமைச்சர் விஜய். அதுவும் பத்து நிமிடத்துக்குள் இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது. இருதரப்புக்குமான நலம் விசாரிப்புடன் இந்தச் சந்திப்பு முடிந்து விட்டது. இது முதல் தோல்வி.
உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில்தான் இருந்தார். விஜய்யைச் சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்தார். ஆனால் அது ரத்து செய்யப்பட்டது. ஆனால் அன்றைய தினம் கேரள முதலமைச்சரை அமித்ஷா சந்தித்துள்ளார். கோவா முதலமைச்சரை அமித்ஷா சந்தித்துள்ளார். நாகலாந்து ஆளுநரை அமித்ஷா சந்தித்துள்ளார். தமிழ்நாட்டு முதலமைச்சரை சந்திக்க மறுத்துள்ளார். அமித்ஷா - விஜய் சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. 'வேறு அலுவல்களில் உள்துறை அமைச்சர் இருக்கிறார்' என்றும், 'குஜராத் செல்கிறார்' என்றும் சொல்லப்பட்டது. திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்துள்ளார். இது இரண்டாவது தோல்வி ஆகும்." இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
முன்னதாக முதல்வர் விஜய்யின் சந்திப்பு குறித்து திமுகவினர் பல்வேறு வகையாக விமர்சித்தார்கள். இதுபற்றி அவர்கள் கூறுகையில், நீட் தேர்வு ரத்து, கல்வி நீதி குறித்த எந்தக் கோரிக்கையும் இல்லை. தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடுவதற்கு ஒன்றிய அரசிடம் தெளிவுரை கேட்பு. பாஜக அரசால் ஒப்புதலே அளிக்காமல் நிராகரிக்கப்பட்டுள்ள கோவை, மதுரை, ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க நிதியமைச்சரிடம் கோரிக்கை. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனான சந்திப்பு கடைசி நிமிடத்தில் ரத்து. அன்று காலை திட்டமிடப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடனான சந்திப்பு ரத்து. டெல்லி தமிழ்நாடு இல்லத்திலும், டெல்லியில் இருந்து புறப்படும் போதும் முதல்வர் விஜய் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் ஒருவர் டெல்லி சென்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தாமல் திரும்பியது வரலாற்றில் இதுவே முதல்முறை" என்று விமர்சித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications