மே.வங்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்ற பெற வையுங்கள்.. மாற்றம் கிடைக்கும்: மோடி பிரசாரம்
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பாரதிய ஜனதாவை ஏற்றுக் கொண்டு லோக்சபா தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யுங்கள் என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:
நாட்டுக்கு இப்போது தேவை ஏழைகளுக்கு உணவு தேவை. இளைஞர்களுக்கு வேலை தேவை. கிராமங்களுக்கு மின்சாரம் தேவை.
சிறுவர்கள் கல்வியை பெறவேண்டும். ஆனால் இங்கு அரசியல் கட்சிகள் மனிதர்களின் அடிப்படை தேவை குறித்து கவலைப்படவில்லை.
இங்கு மாற்றம் வேண்டும் என்று 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இடது சாரிகளை விரட்டிவிட்டு புதிய கட்சியை கொண்டு வந்தீர்கள். ஆனால் உங்களால் மாற்றத்தை உணர முடிந்ததா?.
லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இத் தேர்தல் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும், அரசியல் மேதைகளால் கணிப்பட்டவை அனைத்தும் பொய்யாக போகிறது.
மேற்கு வங்க மக்கள் புரட்சிகரமானவர்கள். நீங்கள் சட்டசபைத் தேர்தலில் மிகவும் பெரிய முடிவை எடுத்தீர்கள். தற்போது நீங்கள் மிகவும் தைரியமான முடிவை எடுக்க வேண்டும்.
நீங்கள் 2014 தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். வருகிற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் எங்களுக்கு கொடுங்கள்.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.