பெங்களூரு குண்டுவெடிப்பு: கேரளாவுக்கும் செல்கிறது தனிப் படை!
பெங்களூரு: பெங்களூரு சர்ச் சாலை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கேரளா 'தீவிரவாத' அமைப்பினருக்கு தொடர்பிருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்த தனிப்படை போலீசார் அங்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூர் சர்ச் சாலை குண்டுவெடிப்பில் சென்னையைச் சேர்ந்த பவானி என்ற பெண் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அல் உம்மா அல்லது மகாராஷ்டிராவின் இந்தியன் முஜஹாதீன் இயக்கங்களுக்குத் தொடர்பிருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்த தனிப்படை போலீசார் அங்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் கேரளா தீவிரவாதிகளுக்கு இந்த குண்டுவெடிப்பில் தொடர்பிருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தவும் தனிப்படை போலீசார் அங்கு செல்ல உள்ளனர். பெங்களூரில் 2008ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவத்தில் கேரளாவின் மதானி மீது குற்றம்சாட்டப்பட்டது. அதேபோல் கேரளாவைச் சேர்ந்த நசீர் உள்ளிட்ட பலர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
இதனடிப்படையில் தற்போதைய குண்டுவெடிப்புக்கும் கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பிருக்கிறதா? என்பது குறித்து விசாரிக்க தனிப்படை போலீசார் அம்மாநிலத்துக்கும் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.