நாங்கள் இல்லை.. பத்மாவத் இயக்குனரின் ஆட்கள்தான் பேருந்தை தாக்கியது.. பல்டி அடிக்கும் கர்னி சேனா
டெல்லி பள்ளி வாகனத்தை தாக்கியது பத்மவாத் இயக்குனர்தான் என்று கர்னி சேனா அமைப்பு கூறியுள்ளது.
அஹமதாபாத்: பத்மாவத் இந்த அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்று யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள். படம் மிகவும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த படம் ரிலீசாக கூடாது என்று டெல்லியில் பள்ளி பேருந்து ஒன்று தாக்கப்பட்டது. கர்னி சேனா அமைப்பு நடத்திய கலவரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கர்னி சேனா அமைப்பு இந்த குற்றச்சாட்டை மறுத்து இருக்கிறது. படத்தின் இயக்குனர் ஆள் வைத்து இப்படி செய்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
பிரச்சனை
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்த பத்மாவத்க்கு பெரிய எதிர்ப்பு நிலவி வருகிறது. ராஜஸ்தானின் சித்தூர் அரசி பத்மாவதி குறித்த படம் என்பதால் ராஜஸ்தானை சேர்ந்த பாஜக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப்படம் வரலாற்றை தவறாக சித்தரிப்பதாகக் கூறி ராஜ்புத் கார்னி சேவா, ஆர்.எஸ்.எஸ்,அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறது.
பேருந்து தாக்குதல்
இந்த நிலையில் நேற்று முதல் நாள் டெல்லியில் பள்ளி ஒன்று தாக்கப்பட்டது. கார்னி சேனா அமைப்பு நடத்திய கொடூரமான போராட்டத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பிரச்சனையில் முதலில் 8 கர்னி சேனா அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
இயக்குனர்
தற்போது இந்த தாக்குதலை நடத்தியது படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தான் என்று கர்னி சேவா குழுவின் தலைவர் லோகேந்திர சிங் கல்வி குறிப்பிட்டு இருக்கிறார். அவர்தான் காசு கொடுத்து இப்படி செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நாங்கள் இப்படி செய்யக்கூடிய ஆட்கள் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
வெற்றி வெற்றி
மேலும் ''எங்கள் போராட்டத்தை பார்த்து அனைவரும் பயந்து போய் இருக்கிறார்கள். எங்களுக்கு இது பெரிய வெற்றி. பல மாநிலங்களில் படம் வெளியாகவில்லை. குஜராத் மல்டிபிளக்ஸ் சங்கம் படத்தை வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளது. நாங்கள் சரியான திசையில் செல்வதை இது காட்டுகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.