"ஆர்.என்.ரவி" போட்ட அந்த நாகாலாந்து ஒப்பந்தத்தில் என்ன இருக்கு? ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
கோஹிமா: நாகாலாந்து அமைப்புகளுடன் மத்திய அரசு சார்பாக ஆர்.என்.ரவி (தற்போதைய தமிழ்நாடு ஆளுநர்) உருவாக்கிய ஒப்பந்தத்தில் உள்ள சரத்துகள் என்ன என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூரில் தொடங்கினார். இந்த யாத்திரை நேற்று நாகாலாந்து மாநிலத்தை சென்றடைந்தது. நாகாலாந்து- மணிப்பூர் எல்லையான ஹூசாமா என்ற இடத்தை சென்றடைந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

கோஹிமாவில் ராகுல்: இதனைத் தொடர்ந்து நாகாலாந்து மாநிலத்தின் விஸ்வேமா கிராமத்தில் இருந்து இன்று தமது யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் இருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது இந்த கிராமம். முன்னதாக கோஹிமாவில் 1944-ம் ஆண்டு 2-ம் உலக யுத்தத்தில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவிடத்திலும் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.
மத நம்பிக்கைகள்: கோஹிமாவில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது: மதம் என்பது தனிநபரின் வாழ்வியல் சார்ந்தது. மத நம்பிக்கைகளை வைத்து ஆதாயம் தேடும் நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடுவது இல்லை. அதில் எங்களுக்கு விருப்பமும் இல்லை. மதம் என்ன கோட்பாடுகளை வழங்கியிருக்கிறதோ அதை பின்பற்றுவோம். நான் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்கிறேன். நான் வெறுப்பு உணர்வுகளை பரப்புகிறவன் அல்ல. இந்து மதத்தை நான் பின்பற்றுகிறேன். அதற்காக அதை நான் சட்டையில் எழுதி ஒட்டிக் கொள்ள விரும்பவில்லை. மதத்தை விரும்பாதவர்கள் அதை சட்டையில் எழுதி ஒட்டிக் கொள்ளலாம்.

நாகா அமைதி பேச்சுவார்த்தை: நாகாலாந்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினேன். நாகாலாந்து மக்களின் விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய மத்திய அரசின் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஏன் முன்னேற்றம் ஏற்படவில்லை என அவர்கள் கேள்வி கேட்கின்றனர். நாடாளுமன்றத்தில் இது குறித்து பேச வேண்டும் என வலியுறுத்துகின்றனர். நாகா அமைதி ஒப்பந்தத்தில் (தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அரசு சார்பாக நாகாலாந்து தலைவர்களுடன் உருவாக்கிய சர்ச்சை ஒப்பந்தம்) என்ன இருக்கிறது என்பது தெளிவாகவே யாருக்கும் தெரியவில்லை. நாகாலாந்து மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். நாகாலாந்து அமைதி பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு 9 ஆண்டுகளாகியும் எந்த முன்னேற்றமும் ஏன் ஏற்படவில்லை? முதல் பாரத் ஜோடோ யாத்திரை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடத்தினோம். இப்போது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நடத்துகிறோம். அனைத்து கலாசாரம், மதம், மொழிகளை ஒருங்கிணைக்கவே யாத்திரையை மேற்கொள்கிறோம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications