மறைந்தார் அப்துல் ஜப்பார்.. போபால் இருண்ட பக்கத்தில் சிக்கிய லட்சக்கணக்கானவர்களுக்கு.. ஒளி தந்தவர்
மக்களுக்காக குரல் கொடுத்த அப்துல் ஜப்பார் காலமானார்
போபால்: இந்திய நாட்டின் வரலாற்றில் பல்வேறு இருண்ட பக்கங்களில் ஒன்று போபால் விஷவாயு துயரம்.. அந்த இருண்ட பக்கத்தால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்தவர் அப்துல் ஜப்பார். 32 வருடங்கள் ஆகியும் போபால் துயரம் தீராத நிலையில்.. அப்துல் ஜப்பாரின் மரணம் பாதிக்கப்பட்ட போபால் மக்களை நிலைகுலைய வைத்துள்ளது!
உலகம் சந்தித்த எத்தனையோ மோசமான சூழலில்.. மறக்க முடியாத ஒன்று போபால் விஷவாயு துயரம் 1984ஆம் ஆண்டு, டிசம்பர் 3-ம் தேதி இரவு முதல் விடிகாலை வரை நடந்தது. "மீதைல் ஐசோ சயனடைடு" இதுதான் அந்த எமவாயுவின் பெயர்!
யூனியன் கார்பைடு என்ற மிகப்பெரிய பூச்சி கொல்லி நிறுவனத்தில் இருந்து விஷக்காற்று சத்தமின்றி வெளியேறி.. தூங்கி கொண்டிருந்தவர்களை அப்படியே பரலோகம் கொண்டு போய்விட்டது.. விழித்து கொண்ட மக்களை இரவோடு இரவாக அலறி அடித்து ஓட செய்தது.. மூக்கை துளைத்து உள்ளே புகும் வாசம்.. மூளைக்கு ஏறும் விஷ நெடி.. கும்மிருட்டில் ஒரு புகை மண்டலம்.. சுற்றி என்ன நடக்கிறது.. எந்த பக்கம் ஓடுவது என்றே தெரியாமல் மக்கள் திணறி விழித்தனர்.
கண் பார்வை
பரிதவித்தவர்களில் ஒருவர்தான் அப்துல் ஜப்பார் என்ற 27 வயது இளைஞன்! தன் அம்மாவை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பதற்காக, ஸ்கூட்டரில் உட்காரவைத்து, 40 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த அப்துல்லா கஞ்ச் என்ற இடத்தை அடைந்தார். ஆனால், துரத்தி கொண்டே வந்த போபால் துயரம், அப்துல் ஜப்பாரின் அம்மா, அப்பா, அண்ணனை அபகரித்து கொண்டதுடன் ஜப்பாரின் கண் பார்வையையும் பறித்து கொண்டு போனது.
விஷவாயு
இதற்கு பிறகு, திரும்பவும் போபாலுக்கு ஜப்பார் வந்தார்.. அப்போது, கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேரின் மரண குவியல்களும், ஒப்பாரி ஓலங்களும், மரண தருவாயில் இழுத்து கொண்டிருக்கும் உயிர்களையும், கண்டு உறைந்து நின்றார்... கண்களில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.. தன்னால் முடிந்த அளவு பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தார்.. ஏன் பிணங்களைகூட ஆஸ்பத்திரியில் கொண்டு போய் ஒப்படைத்தார்.. ஆனால் நாள் ஆக ஆக.. வாரம் ஆக ஆக.. மாதம் ஆக ஆக.. பல உயிர்கள் ஒவ்வொன்றாக சரிந்தன.. 8,000 பேர் விஷவாயுவினால் காவு வாங்கப்பட்டனர்.. உடலில் என்னென்ன உறுப்புகள் உள்ளதோ அவ்வளவு உறுப்புகளையும் விஷவாயு அரிக்க தொடங்கியது.
போராட்டம்
இப்போதுதான் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடுவது என முடிவெடுத்தார் ஜப்பார்.. ஊரில், தெருவில், முச்சந்தியில் போராட்டங்கள் வலுவாயின.. "கார்பைட் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற அரசியல்வாதிகள் எங்களை கைவிட்டுவிட்டார்கள்.. எங்களுக்கான போராட்டம் இது.. என்று சொல்லிதான் இந்த போராட்டத்தை முன்னெடுத்தார்.
இழப்பீடு
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை விடுத்து, இந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடும் நீதியும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். உயிரிழந்தவர்களுக்காகவும் உயிர்பிழைத்தவர்களுக்காகவும், நீதி, நிவாரணம் கிடைக்க 'போபால் கேஸ் பீடிட் மஹிலா உத்யோக் சங்காதன்' என்ற அமைப்பை ஜப்பார் தொடங்கினார்.
பேரணிகள்
1987-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் ஜப்பார் செய்த நன்மைகளை பட்டியலிட்டு சொன்னாலும் மாளாது.. "எங்களுக்கு எதற்கு கருணை? வெறும் பணத்தை புரட்டி எத்தனை பேருக்கு தர முடியும்? எவ்வளவு நாள் தர முடியும்? வேலை வாய்ப்பு ஒன்றே இதற்கு தீர்வு என்ற உறுதியான கொள்கையை சுப்ரீம் கோர்ட்டில் முன்வைத்தார் ஜப்பார். இவர் நடத்திய எதிர்ப்பு பேரணிகள் நாடாளுமன்றத்தை அன்றே புரட்டி போட்டன.
இழப்பீடு
1989-ம் ஆண்டு, யூனியன் கார்பைட் நிறுவனம் பாதிக்கப்பட்ட 1 லட்சம் பேருக்கு இழப்பீடு அளித்தது. இறுதியில், ஜப்பாரின் விடாத சட்டப்போராட்டத்தின் மூலம் 5 லட்சம் பேருக்கு இழப்பீடு வழங்கியது சுப்ரீம் கோர்ட். யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு எதிராக ஏறத்தாழ 35 ஆண்டுகள் போராடிய ஜப்பாரால், பாதிக்கப்பட்ட 5 லட்சம் பேருக்கும், இறந்த 25 ஆயிரம் பேருக்கும் இழப்பீடு பெற்றுத்தரவும் முடிந்தது.
விஷவாயு
இது வெறும் கோர்ட் சமாச்சாரம் என்று மட்டும் நினைத்து ஜப்பார் ஒதுங்கிவிடவில்லை.. சொந்தமாக "சுயமரியாதை நிலையம்" என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கி, போபால் விஷவாயுவினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி தந்தார்.. இப்போது ஜப்பாரின் புண்ணியத்தால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களின் வீட்டில் அடுப்பெரிந்து கொண்டிருக்கிறது!
அவமானம்
கடந்த சில தினங்களுக்கு ஜப்பாருக்கு முன்பு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. போபால் நினைவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு மிகவும் அவதிப்பட்டார்.. "இந்த ஆஸ்பத்திரியில் சரியான வசதிகள் இல்லை.. ரொம்பவும் அலைக்கழிக்கிறார்கள்.. ஒரு அரசு ஆஸ்பத்தியில் இப்படி அடிப்படை வசதி இல்லாதது அவமானமா இருக்கு" என்று நண்பர்களிடம் ஜப்பார் வருத்தத்துடன் சொல்லி உள்ளார்.
கருப்பு துயரம்
என்றாவது ஒருநாள் அநீதிக்கு முறையான நீதி கிடைத்துவிடும் என்று நம்பிக் கொண்டே காத்திருந்த ஜப்பார், போன வாரம் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். தன்னுடைய 62 வயது வரை, போபால் மக்களுக்கான போராட்டத்தை அவர் முடித்து கொள்ளவே இல்லை! நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய கருப்பு துயரத்துக்கு இன்னும் தீர்வு காணப்படாத நிலையில்... கடைசி வரை நீதி கேட்டு போராடி.. அது கிடைக்காமலேயே உயிரை விட்டுவிட்டார் "ஜப்பார் பாய்"!