"SIR.." செய்வது எல்லாம் சரிதான்.. தேர்தல் ஆணையம் திட்டவட்டம்.. காங்கிரஸ் அதிருப்தி! என்ன மேட்டர்
பாட்னா: பீகார் மாநிலத்தில் சார் எனப்படும் சிறப்புத் திருத்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் எடுத்து வரும் நிலையில், இதற்கு அங்குள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைக் கூறி வந்தன. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் முக்கியமான விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளது.
பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து பீகாரில் சார் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கையை (special intensive revision -SIR) பீகார் அரசு எடுத்து வருகிறது. இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையில் உறுதியாக இருக்கிறது.

தேர்தல் ஆணையம்
அனைத்து அரசியல் கட்சிகளுடனும் விரிவான ஆலோசனை நடத்தியதாகவும் தற்போதைய வாக்காளர் பட்டியலின் நிலை குறித்து யாரும் திருப்தியடையவில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் குறிப்பிட்டார். மேலும், ஜூன் 24 உத்தரவின்படி சார் நடத்தப்படுவதாகவும் அதில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் பீகார் தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) பாட்னாவில் வெளிவரும் செய்தித்தாளில் ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தார். அதில் மக்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைச் சமர்ப்பிக்கலாம் மற்றும் ஆவணங்களைப் பின்னர் வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. "உங்களிடம் தேவையான ஆவணங்கள் இல்லையென்றாலும், வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளிடம் படிவங்களை வழங்குங்கள்" என்று கூறப்பட்டு இருந்தது.
காங்கிரஸ்
எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே தேர்தல் ஆணையம் பின்வாங்கியிருப்பதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும், "மக்கள் எழுந்தால் பாஜக பின்வாங்கும்.. பீகாரில் கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையைப் பறிக்க பாஜக தீட்டிய மாஸ்டர் பிளான், இப்போது பாஜகவையே சிக்க வைக்கிறது.. தேர்தல் ஆணையம் இந்த விளம்பரத்தை வெளியிட எதிர்க்கட்சி, பொதுமக்களின் அழுத்தம் தான் காரணம்
இது மக்களைத் தவறாக வழிநடத்தும் பாஜகவின் தந்திரத்தின் ஒரு பகுதியாகும். எப்படியாவது ஜனநாயகத்தை நசுக்க பாஜக முடிவு செய்துவிட்டது என்பதுதான் உண்மை. ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பைச் சந்தித்தவுடன், அது ஒரு படி பின்வாங்குகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையம் விளக்கம்
இதற்கிடையே தேர்தல் ஆணையம் இது குறித்து விளக்கமளித்துள்ளது. அதாவது தேர்தல் ஆணையம் முன்பு அறிவித்தபடியே திட்டமிட்டபடி வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கை நடந்து வருவதாகவும் இதில் மாற்றம் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி வினோத் சிங் குஞ்சியால் கூறுகையில், "பீகாரில் சார் நடவடிக்கையானது ஜூன் 24ம் தேதி தேதியிட்ட தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படியே நடந்து வருகிறது.
ஆவணங்களைப் பூர்த்தி செய்து அதை வாங்கவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வாக்காளர்கள் தங்களது படிவங்களைச் சமர்ப்பித்த பின்னரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க அவகாசம் உள்ளது. அனைத்து நடவடிக்கைகளும் ஜூன் 24ம் தேதி வெளியிடப்பட்ட தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படியே நடந்து வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
தெளிவுபடுத்திய காங்கிரஸ்
மேலும், அறிவுறுத்தல்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் சார் நடவடிக்கை திட்டமிட்டபடியே நடைபெறுகிறது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் ஜூலை 25க்குள் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதுபோல செய்யத் தவறினாலும் கூட ஆட்சேபணைகள் காலத்திலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதாவது சார் நடவடிக்கையில் ஆவண சமர்ப்பிப்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அழுத்தம் காரணமாகவே ஆவணங்கள் சமர்ப்பிக்கக் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள எதிர்க்கட்சிகள் கூறின. இருப்பினும், நடவடிக்கையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்றும் திட்டமிட்டபடியே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.












Click it and Unblock the Notifications