பீகார் தேர்தல்: ரொம்பவே அகம்பாவம் பிடித்த நிதிஷ்குமாரை நம்ப முடியாது... பிரதமர் மோடி கடும் தாக்கு
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மிகவும் அகம்பாவம் பிடித்தவர்... நம்பிக்கையற்றவர் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பீகார் சட்டசபைக்கான தேர்தல் அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
பீகாருக்கு ரூ.1.65 லட்சம் கோடி சிறப்பு நிதியை நான் அறிவித்தது தொடர்பாக பலரும் கேள்வியெழுப்புகின்றனர். அது வருமா, வராதா என்கின்றனர். தற்போதைய அரசுக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் அது உங்களை வந்தடையுமா?
அப்படியே நான் கொடுத்தாலும், நிதிஷ் குமாரின் அகம்பாவம் அதனை திருப்பி அனுப்பி விடும். நான் ரூ.1.65 லட்சம் கோடி கொடுத்தால் மோடி கொடுத்ததால் அந்தப் பணம் எனக்குத் தேவையில்லை என அவர் அறிவித்து விடுவார். அவரை நான் நம்ப மாட்டேன்.
ஜிதன்ராம் மாஞ்சிக்கு அவர் என்ன செய்தார். மத்தியிலுள்ள அரசாங்கம் யாருக்கும் சாதகமாக நடந்து கொள்ளாது.
வளர்ச்சிக்காக மக்கள் வாக்களிக்க வேண்டிய தருணம் இது. பீகாரின் வளர்ச்சி நாட்டோடு தொடர்புடையது. ஏராளமான இளைஞர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.
பீகார் மாநில இளைஞர்கள், பெற்றோரை தனியாக விட்டுவிட்டு வேலை தேடி வெளியூர் செல்கிறார்கள். அவர்களின் வேலைவாய்ப்பு பிரச்னைக்கு தீர்வுகாண எங்களுக்கு வாக்களியுங்கள். எனது அரசு, பணக்காரர்களுக்கு ஆதரவான அரசு என்று கூறுவதை ஏற்க முடியாது. ஏழைகளுக்காக ஜன்தன் யோஜனா, அனைவருக்கும் வீடு, முத்ரா வங்கி, செல்வமகள் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.
மாவோயிஸ்டுகள் வன்முறை பாதையை கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டிய நேரம் இது.. துப்பாக்கி தோட்டாக்களால் எந்த பிரச்னைக்கும் தீர்வுகாண முடியாது.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.