“காங். ரயில் கட்டணத்தை உயர்த்தி இருந்தால் பீரங்கியால் சுடச் சொல்லியிருக்கும் பாஜக”
மும்பை: இதுவே காங்கிரஸ் ஆட்சியில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தால் அவர்களை பீரங்கியால் சுட வேண்டும் என்று பாஜக கூறியிருக்கும் என சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த கையோடு ரயில் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது. பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே தங்கள் கட்சி பத்திரிக்கையில் கூறுகையில்,
பயணிகள் கட்டணத்தை 14 சதவீதம் உயர்த்தி ரயில்வே அமைச்சர் பொதுமக்கள் மீது ரயிலை ஏற்றிவிட்டார். இதுவே காங்கிரஸ் ஆட்சியில் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தால் அவர்களை பீரங்கியால் சுட வேண்டும் என்று பாஜக கூறியிருக்கும்.
மோடி நல்ல நாள் வரும் என்று வாக்குறுதி அளித்தார். விலைகளை குறைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் கூறினார். ஆனால் தற்போது பாமர மக்கள் தான் சுமையை தாங்க வேண்டி உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெறுமாறு பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பிற பாஜக தலைவர்கள் கட்டண உயர்வு முடிவு சரியானது தான் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரங்களின்போது நல்ல நாள் வருகின்றது என்றாரே அது இது தானா என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.












Click it and Unblock the Notifications