டெல்லி தேர்தல்: பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி வேட்புமனு தாக்கல் செய்தார்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இப்போதே முதல்வராக உணர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
பிப்ரவரி 7ஆம் தேதி டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக கடந்த புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
கிழக்கு டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் கிரண்பேடி தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக சென்றார்.

அப்போது பொது மக்கள் பலரை நேரடியாக சந்தித்த கிரண்பேடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். டீ வியாபாரி, செய்திதாள் விற்பனையாளர் சிலரை சந்தித்து பேசினார். ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டிச் சென்ற இளைஞர்கள் சிலரிடமும் கிரண்பேடி பேசி ஆலோசனை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் தேவைகள் என்ன என்பதை கண்டறிந்து, அவற்றை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் ஏற்கனவே என்னை முதல்வராகத் தான் உணர்கிறேன். மக்களின் பாதுகாப்பிற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதனை மேற்கொள்வேன் என்றார்.
ஒவ்வொரு நாளும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்து, அதுனை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன். வெறும் பேச்சில் இல்லாமல், கள பணியை மட்டுமே நான் நம்புகிறேன். மொத்தத்தில் டெல்லியில் வித்தியாசமானதொரு நல்லாட்சியை ஏற்படுத்துவேன் என தெரிவித்தார். பின்னர் கிரண்பேடி தனது வேட்புமனுவை 12.50 மணிக்கு தாக்கல் செய்தார்.
இன்று மனுதாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதால் டெல்லியில் இன்று அனைத்து கட்சி வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்வதில் மும்முரம் காட்டினார்கள். டெல்லியில் எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சி வேட்பாளர்களின் ஊர்வலம் காணப்பட்டது. இதனால் டெல்லியில் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.












Click it and Unblock the Notifications