டெல்லி சட்டசபையில் கடும் அமளி: முதல்வர் கெஜ்ரிவால் மைக் உடைப்பு!
டெல்லி: டெல்லி சட்டபேரவையின் சிறப்பு கூட்டத்தொடரில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் இணைந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். சோம்நாத் பாரதிக்கு எதிராக நடைபெற்ற இந்த அமளியில் முதல்வர் கெஜ்ரிவாலின் 'மைக்' உடைக்கப்பட்டது.
டெல்லி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத் தொடரின் முதல் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அந்த கூட்டத்தில், நள்ளிரவு சோதனையில் ஆப்பிரிக்க பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கிய சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன.
பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆர்.பி.சிங், காகிதங்களை கிழித்து சோம்நாத் பாரதி மீது வீசி எறிந்தார். வளையல்களையும், லிப்ஸ்டிக்கையும் பாரதி முன்பு வைத்தார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மைக்கை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆசிப் முகமது கான் உடைத்தார். சபாநாயகர் எம்.எஸ்.திர் கையில் இருந்த கோப்புகளையும் அவர் கிழித்தார்.
சில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் மைக்கை பயன்படுத்த முடியாதபடி அவரது கையை பிடித்துக் கொண்டனர்.
இந்த அமளியில் நிறைய மைக்குகளை இரு கட்சியினரும் உடைத்தெறிந்ததுடன், சோம்நாத் பாரதியை தரக்குறைவாக பேசினார்கள்.
இந்த அமளியால் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இதன் மூலம் காங்கிரஸ், பா.ஜ.க.வின் கூட்டு அம்பலமாகி விட்டதாக தெரிவித்தார்.
ஜன்லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்த அனுமதிக்கா விட்டால் தான் ராஜினாமா செய்யப் போவதாகவும் கெஜ்ரிவால் மிரட்டல் விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் டெல்லியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தெலுங்கானா மசோதாவிற்கு எதிராக கூச்சல், குழப்பம், அமளி ஏற்பட்டது. மிளகு பொடி தூவி உறுப்பினர்களை அலற வைத்தனர். கத்தியோடு வந்து களேபரம் செய்தனர். ஆனால் கெஜ்ரிவால் சர்ச்சைக்குரிய மசோதா எதையும் தாக்கல் செய்ய முற்படவில்லை. ஆனாலும் சோம்நாத் பாரதி முன்வைத்து சட்டப்பேரவையை அமளிதுமளி செய்துவிட்டனர் காங்கிரஸ், பாஜக எம்.எல்.ஏக்கள்.