ஜனாதிபதி வேட்பாளர் யார்... எதிர்க்கட்சிகளுடன் பாஜக தீவிர ஆலோசனை
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் பாஜக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: புதிய ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளர் தெரிவில் கவனம் செலுத்தியுள்ள பாஜக, அது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வருகிற ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க ஜூலை 17ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இதையொட்டி தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.
வரும் 28ம் தேதி கடைசி நாள் என்பதால் அதற்குள் வேட்பாளரை அறிவிக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. வேட்பாளரைத் தேர்வு செய்வதில் பாஜக தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, வெங்கய்ய நாயுடு ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் எதிர்க்கட்சிகளும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
வேட்பாளரைத் தேர்வு செய்ய 10 பேர் கொண்ட குழு ஒன்றை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. இந்தக் குழு இன்று டெல்லியில் சோனியா தலைமையில் கூடி ஆலோசனை நடத்துகிறது. பாஜக கூட்டணியிலும், காங்கிரஸ் கூட்டணியிலும் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
இதற்கிடையே ஜனாதிபதி தேர்தலில் பொதுவான வேட்பாளரை நிறுத்தவும் பாஜக தலைவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறுகையில், 'பாஜக வேட்பாளரை நிறுத்தும் முன் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவோம்' என்று கூறினார்.
அடுத்த வாரம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, வெங்கய்ய நாயுடு ஆகியோர் சந்தித்துப் பேசுவார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டதும் 25ம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதற்காக அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்கா தலைமையில் செயலாளர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.