ஓடவோ, ஒளியவோ முடியாது-கதறினாலும் மிசோரமில் எங்க கூட்டணி ஆட்சிதான்..மாநில கட்சிகளுக்கு பாஜக மிரட்டல்!
ஐஸ்வால்: மிசோரம் சட்டசபை தேர்தலுக்கு பின்னர் பாஜகவின் கூட்டணி ஆட்சிதான் அமையும் என அம்மாநில பாஜக தலைவரும் துணை சபாநாயகருமான நுமல் மோமின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மிசோரம் சட்டசபை தேர்தல் நவம்பர் 7-ந் தேதி நடைபெற உள்ளது. மிசோரமில் டிசம்பர் 3-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மிசோரம் மாநிலத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ் மற்றும் பாஜகவை களத்தில் உள்ளன. மிசோரம் மாநிலத்தில் தொங்கு சட்டசபைக்குதான் அதிக வாய்ப்புகள் என்கின்றன தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள்.
மிசோரமில் தொங்கு சட்டசபை உருவானால் மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமையும் என்கிற நிலைமைதான் உள்ளது. ஆனால் மிசோ தேசிய முன்னணியானது மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து பாஜகவுடன் கை கோர்க்காது என கூறப்படுகிறது. அதேபோல பாஜகவின் பி டீம் என விமர்சிக்கப்படுகிற ஜோரம் மக்கள் இயக்கமும் பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கமாட்டோம் என தெரிவித்தது.
இது தொடர்பாக மாநில பாஜக தலைவரும் துணை சபாநாயகருமான நுமல் மோமின் கூறியதாவது: பாஜகவை பொறுத்தவரை அனைத்து வாய்ப்புகளுக்கான கதவுகளையும் திறந்து வைத்துள்ளது. ஆனால் மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவற்றுக்கு எந்த ஒரு வாய்ப்புமே இல்லை. நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர தயாராக் உள்ளோம். அதேபோல கூட்டணி ஆட்சியில் பங்கேற்கவும் பாஜக தயார். இது குறித்து கட்சி தலைமைதான் இறுதி முடிவெடுக்கும்.
மிசோரமில் பாஜகவுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கத்துக்கு தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கப் போவது இல்லை என்பது மட்டும் உறுதியாக தெரியும். பாஜகவின் கூட்டணி ஆட்சிதான் அமையும். அஸ்ஸாமில் ஹேமந்த் பிஸ்வா மாடல் அரசு, மிசோரமில் அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அதனால் கள நிலவரம் பாஜகவுக்கே சாதகமாக இருக்கிறது. இவ்வாறு நுமல் மோமின் கூறினார்.












Click it and Unblock the Notifications