குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: 500க்கும் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கிய பா.ஜ.க.!
காந்திநகர்: குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் 500க்கும் மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி களமிறக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியோ 800க்கும் மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கு உள்ளாட்சித் தேர்தல் ஒரு பெரும் சவாலாக இருக்கப் போகிறது. இடஒதுக்கீடு கொடு அல்லது இடஒதுக்கீட்டு முறையையே அழி என்ற முழக்கத்துடன் போராடி வரும் படேல் சமூகத்தின் போராட்டத்தை மிகக் கடுமையாக ஒடுக்கி உள்ளது குஜராத் அரசு.

இதனால் படேல் சமூகத்தினர், காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்த்துள்ளனர். படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் மீதான தேசத் துரோக வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். குஜராத் உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸுடன் கை கோர்ப்போம் என்று படேல் சமூகம் அறிவித்துள்ளது. இதுநாள் வரை பா.ஜ.க. வாக்கு வங்கியாகத்தான் படேல் சமூகம் இருந்து வந்தது.
அண்மையில் பீகார் சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நிலையில் குஜராத் தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ.க. தோல்வி அடைந்தால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிப்பார்கள் என அக்கட்சித் தலைவர் அமித்ஷா பேசிய பேச்சின் தாக்கம் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை. ஆனாலும் இதைபற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாத பா.ஜ.க. குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் 500க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை வேட்பாளர்களாக்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சியோ 800க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்த போது, உள்ளாட்சித் தேர்தலில் 300 முஸ்லிம்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். இதில் 250க்கும் அதிகமானோர் வெற்றி பெற்றிருந்தனர்.
குஜராத்தைப் பொறுத்தவரையில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 9%. இம்முறை பாரதிய ஜனதா 40% முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications