சிறுபான்மையினருக்கான 4% இடஒதுக்கீடு ரத்து.. “தேர்தல் வியூகம்”.. கர்நாடகா பாஜக அரசின் ‘ஷாக்’ முடிவு!
பெங்களூர் : சிறுபான்மையினருக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கர்நாடக மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீட்டின் கீழ் சிறுபான்மையினரை கொண்டுவர கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் இப்போதே சூடுபிடித்துள்ளது. ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிரமாக தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளன. ஆட்சியை எப்படியாவது தக்கவைக்க வேண்டும் என்று பாஜக மும்முரம் காட்டி வருகிறது.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜகவின் முன்னணி தலைவர்கள் அடிக்கடி கர்நாடகாவுக்கு வந்து செல்கின்றனர். கர்நாடகா அரசியலில் ஒக்கலிகர், லிங்காயத் சமூகத்தினருக்கு பெரிய செல்வாக்கு உண்டு. இந்தச் சமூகத்தவரின் வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக சில மாதங்களுக்கு முன்னர் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக மாநில பாஜக அரசு, சிறுபான்மையினருக்கான 4 சதவீத ஒதுக்கீட்டை நீக்கி, இட இடஒதுக்கீட்டில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. இன்று நடைபெற்ற கர்நாடக மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், இட ஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து 56 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினருக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முஸ்லீம்களுக்கு தனியாக வழங்கப்பட்ட 4% இட ஒதுக்கீடு ரத்தாவதால், அவர்கள் இப்போது 10 சதவீத பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (EWS) இட ஒதுக்கீட்டிற்கு மாற்றப்படுவார்கள்.
சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீடு இனி ஒக்கலிகர் சமூகத்தவருக்கு 2 சதவீதம், லிங்காயத்துகளுக்கு 2 சதவீதம் என அதிகரித்து வழங்கப்படும் என்றும் கர்நாடகா பாஜக அரசு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications