ஹரியானா "பாஜக ஆட்சி" அம்போ? சுயேட்சைகளை வாபஸ் பெற வைத்து ஆட்டம் ஆடிய காங்கிரஸ்.. அடுத்தது என்ன?
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேட்சைகள் வாபஸ் பெற்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டதால் எந்த நேரத்திலும் அங்கு ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் ஹரியானாவில் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படவே வாய்ப்பு அதிகம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
90 இடங்களைக் கொண்ட ஹரியானா சட்டசபைக்கு 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. ஹரியானாவில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவை 46 எம்.எல்.ஏக்கள்.

2019-ம் ஆண்டு தேர்தலில் ஹரியானாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 40; காங்கிரஸ் 31 இடங்களில் வென்றன. துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி 10 இடங்களில் வென்றது. லோக் தள் கட்சி 1 இடத்தில் வெற்றி பெற்றது. அதேநேரத்தில் சுயேட்சைகள் 7 இடங்களில் வென்றனர்.
ஹரியானாவில் ஜேஜேபி மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. பாஜகவின் மனோகர் லால் கட்டார் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக ஜேஜேபியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா பதவியைப் பெற்றார். ஆனால் பாஜக ஆட்சிக்கு எதிராக கடும் அதிருப்தி நிலவியது. மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி விலகியது. இதனையடுத்து முதல்வர் மனோகர் லால் கட்டார் மாற்றப்பட்டு புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்.
தற்போது ஹரியானா சட்டசபையில் மொத்தம் 89 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த நிலையில் பாஜக ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேட்சைகள் வாபஸ் பெற்றனர். இதனால் ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. ஆனால் தங்களுக்கு இன்னமும் பெரும்பான்மை இருக்கிறது என்கிறது பாஜக.
தற்போதைய நிலையில் ஹரியானா சட்டசபையில் கட்சிகளின் பலம்:
பாஜக- 40
காங்கிரஸ்- 30
ஜேஜேபி- 10
ஹெச்.எல்.பி-1
லோக்தள்-1
சுயேட்சைகள்- 7
பாஜக அரசு நீடிக்குமா?: ஹரியானாவில் பாஜகவுக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சுயேட்சைகள் 3 பேர் வாபஸ் பெற்ற நிலையில் 2 சுயேட்சைகளும் ஹெச்எல்பி கட்சியும் பாஜகவை ஆதரிக்கின்றனர். இதனால் பாஜகவின் பலம் 43. ஆனால் பெரும்பான்மைக்கு தேவை 46. தற்போதைய நிலையில் 45 எம்.எல்.ஏக்கள் தேவை. காங்கிரஸ் அல்லது ஜேஜேபி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கட்சியை உடைத்துதான் இந்த ஆதரவை பாஜகவால் பெற முடியும்.
காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியுமா? : ஹரியானாவில் காங்கிரஸுக்கு 30 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மேலும் தற்போது 3 சுயேட்சைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க மேலும் 13 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. லோக் தளம் கட்சி, ஜேஜேபி காங்கிரஸை ஆதரிக்குமா? என்பதும் தெரியவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியாத நிலைதான் உள்ளது.
ஆட்சி கலைப்பு?: ஹரியானா சட்டசபைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் பாஜக அரசு பெரும்பான்மை இழந்த நிலையில் கவிழக் காத்திருக்கிறது. இதனால் ஹரியானாவில் பாஜக அரசு கலைக்கப்பட்டு தேர்தல் வரை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications