'செல்ஃபி வித் மோடி'... ஆம் ஆத்மி ஸ்டைலில் டெல்லி வாக்காளர்களைக் கவர பாஜகவின் புது யுக்தி!
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் இளம் வாக்காளர்களைக் கவரும் விதமாக ‘மோடியுடன் செல்ஃபி' என்ற புதிய திட்டத்தை பாஜக அறிவித்துள்ளது.
சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சி தேர்தல் நிதி திரட்டும் முயற்சியாக, அக்கட்சித் தலைவரும், டெல்லி முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவாலுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் திட்டம் ஒன்றை அறிவித்தது. அதற்கு ‘செல்ஃபி வித் மப்ளர்மேன்' என ஆம் ஆத்மி பெயரிட்டது. மேலும், கெஜ்ரிவாலுடன் உணவு உண்ணும் கட்டணத் திட்டம் ஒன்றையும் அக்கட்சி அறிமுகப் படுத்தியது.

ஆம் ஆத்மியின் இத்திட்டங்களுக்கு மக்களிடையே கிடைத்த அமோக ஆதரவைத் தொடர்ந்து, பாஜகவும் தற்போது அவ்வழிமுறைகளைப் பின்பற்ற முடிவு செய்துள்ளது. அதன் முதல்கட்டமாக, பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் திட்டம் ஒன்றை பாஜக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது :
மோடியுடன் செல்ஃபி என்ற இந்த திட்டத்துக்காக தலைநகர் முழுவதிலும் 2,500 சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில், மோடியின் உருவம் போன்ற மாயத்தோற்றம் (விர்ச்சுவல்) ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனுடன் நின்று இளைஞர்கள் செல்ஃபி ஃபோட்டோக்கள் எடுத்துக்கொள்ளலாம். சனிக்கிழமை தொடங்கிய முதல் சாவடியில், கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மோடியின் மாயத்தோற்றத்துடன் நின்று முதல் செல்ஃபி புகைப்படத்தை எடுத்துக் கொண்டார்.
பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இளைஞர்களின் வாக்குகளை ஈர்ப்பதற்கு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டெல்லியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண் பேடிக்காக ஏன் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "கிரண் பேடி பிரசாரத்துக்காக டெல்லியின் சாலைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார். எனவே, அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்வது தற்போது சுலபம்' என்றார் அவர்.












Click it and Unblock the Notifications