சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை.. மேற்கு வங்க தேர்தல் ரிசல்ட்டுக்குப் பின் கொடூரம்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் விரைவில் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் மத்தியகிராம் பகுதியில் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் நேர்முக உதவியாளர் சந்திரநாத் ரத் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக 207 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. பாஜகவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் சுவேந்து அதிகாரி. கடந்த தேர்தலின்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக-வுக்கு தாவினார். அப்போது பாஜக ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இதன் மூலம் எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.

நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் பபானிபூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டார் சுவேந்து அதிகாரி. மேலும் நந்திகிராம் தொகுதியிலும் அவர் போட்டியிட்டார். பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். நந்திகிராம் தொகுதியில் 3-வது முறையாக வெற்றி வாகை சூடியுள்ளார் சுவேந்து அதிகாரி.
இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி தேர்வு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தாவில் வரும் 8 ஆம் தேதியன்று நடைபெறும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் மத்தியகிராம் பகுதியில் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் நேர்முக உதவியாளர் சந்திரநாத் ரத் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதாவது சந்திரநாத் ரத் தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்.
இதில் தலை, மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மத்தியகிராம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவி வருவதால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பாஜக தலைவரின் நேர்முக உதவியாளார் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரநாத் ரத் பயணித்த காரின் முன்பக்கக் கண்ணாடி வழியாக மூன்று குண்டுகள் துளைத்துச் சென்று, சந்திரன் நாத்தின் உடலில் அடுத்தடுத்துப் பாய்ந்துள்ளன. ஒரு மோட்டார் சைக்கிளிலிருந்து இந்தக் குண்டுகள் சுடப்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வாகனத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன, அதில், காரின் முன்பக்கக் கண்ணாடியில் மூன்று குண்டுகள் துளைத்ததற்கான அடையாளங்கள் தெளிவாகத் தெரிகின்றன.
அந்த மோட்டார் சைக்கிளில் பதிவு எண் பலகை ஏதும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. அந்த பைக்கில் பயணித்தவர் யார்? தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளம் குறித்தும் காவல்துறையினருக்கு இதுவரை தெளிவான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications