பீகாரில் பாஜக கூட்டணி 21 இடங்களைக் கைப்பற்றும்: ஏ.பி.பி.- நீல்சன் கருத்து கணிப்பு
டெல்லி: லோக்சபா தேர்தலில் பீகார் மாநிலத்தில் 40 தொகுதிகளில் 21 இடங்களை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றும் என்று தேர்தல் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி ஏ.பி.பி நியூஸ் மற்றும் நீல்சன் குழுமம் கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி பீகாரில் பாஜக கணிசமான இடங்களைக் கைப்பற்றும் என்கிறது சர்வே.
பீகாரில் பாஜகவுக்கு 19 இடங்கள்
பீகாரில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. இதில் 19 இடங்களை பாஜக கைப்பற்றும் என்கிறது சர்வே. அதாவது 33% வாக்குகளை பாஜக கூட்டணி கைப்பற்றுமாம். கடந்த தேர்தலில் பாஜக 11 இடங்களை மட்டுமே பீகாரில் கைப்பற்றியிருந்தது.
பாஸ்வான் கட்சிக்கு 2
40 தொகுதிகளில் பாஜகவின் கூட்டணி கட்சியான ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி 2 தொகுதிகளில் வெல்லும் என்கிறது கருத்து கணிப்பு
ஐக்கிய ஜனதா தளத்துக்கு கடும் பின்னடைவு
அதே நேரத்தில் 2009ஆம் ஆண்டு தேர்தலில் 20 தொகுதிகளைக் கைப்பற்றிய ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு இம்முறை 6 தொகுதிகள் மட்டுமே கிடைக்குமாம்.
ஆர்.ஜே.டிக்கு 10 தொகுதிகள்
பீகாரில் லாலு தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 10 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. அதாவது 17% வாக்குகள் ஆர்.ஜே.டிக்கு கிடைக்கும் என்கிறது சர்வே.
காங்கிரசுக்கும் 2 தான்..
பீகார் மாநிலத்தில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கும் 2 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாம்.