மகாராஷ்டிரா தேர்தல்: சிவசேனா- பாஜக கூட்டணி முறிகிறது? தனித்துப் போட்டியிடுகிறது பாஜக?
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கான தேர்தல் அக்டோபர் மாதம் 15-ந் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கிவிட்ட நிலையில், பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு எற்படவில்லை.
தலா 135 தொகுதிகள்..
150 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட சிவசேனா திட்டமிட்டுள்ளது. ஆனால் இரு கட்சிகளும் தலா 135 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும் எஞ்சிய 18 தொகுதிகளை மற்ற சிறிய கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா வலியுறுத்தி வருகிறது.
உத்தவ் தாக்கரே திட்டவட்டம்
இதனை ஏற்கவே முடியாது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனால் பாஜக- சிவசேனா இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நின்றது.
மும்பையில் அமித்ஷா
இந்த நிலையில் பாஜக தலைவர் அமித்ஷா மும்பையில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடிக்க கேட்டுக் கொண்டார். இதனால் சிவசேனாவுக்கு பாஜக கெடுவும் விதித்துப் பார்த்தது.
நாங்களே பெரிய கட்சி- சிவசேனா
ஆனால் சிவசேனாவோ இறங்கி வருவதாக இல்லை. மகாராஷ்டிராவைப் பொறுத்தவரையில் சிவசேனாதான் பெரிய கட்சி.. முதல்வர் பதவியும் சிவசேனாவுக்கே என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருக்கிறார். அவரது இந்த உறுதியான நிலைப்பாட்டை அக்கட்சித் தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தொண்டர்கள் ஆதரவு
இதனால் மும்பையில் வந்து குவியும் சிவசேனா தொண்டர்கள், ஒருபோதும் பாஜகவுக்காக ஒரு தொகுதியைக் கூட விட்டுக் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர்.
பழிவாங்குகிறது சிவசேனா
ஆனால் மத்திய அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்கள் ஒதுக்காதது, மாநில ஆளுநர்கள் நியமனம் உள்ளிட்டவற்றில் கலந்து ஆலோசிக்காதது என்று பாஜக மீது இருக்கும் அதிருப்திக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே உத்தவ் தாக்கரே செயல்படுகிறாரோ என்று சந்தேகிக்கிறது பாஜக.
கடைசியாக 119 தொகுதிகள்..
இந்த நிலையில் சிவசேனா கட்சி 119 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்க முன்வந்துள்ளது. இதற்கு மேல் ஒரு தொகுதியைக் கூட தர முடியாது என்பதில் அக்கட்சி உறுதியாக இருக்கிறது.
அமித்ஷா- உத்தவ் தாக்கரே பேச்சு
இதனைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரேவை தொலைபேசியில் அமித்ஷா அழைத்துப் பேசியதாகவும் அப்போது தொகுதிப் பங்கீட்டில் விட்டுக் கொடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அமித்ஷா- உத்தவ் தாக்கரே இடையே எந்த ஒரு பேச்சுவார்த்தையுமே நடைபெறவில்லை என்கிறது சிவசேனா தரப்பு.
பாஜக தனித்துப் போட்டி?
இப்படி சிவசேனாவின் தொடர் பிடிவாதத்தால் மகாராஷ்டிரா மாநில பாஜகவினர் தனித்துப் போட்டியிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜக தனித்துப் போட்டியிட முடிவு செய்தால் இன்று மாலையே வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.