ம.பி: காங். அரசுக்கு ஆதரவு தெரிவித்த பாஜக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக தயக்கம்
போபால்: கர்நாடகாவில் குமாரசாமி அரசை கவிழ்த்ததை போல மத்திய பிரதேசத்தில் ஆளும் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயன்று மூக்குடைபட்டு நிற்கிறது பாஜக.
பாஜக மேலிடம் உத்தரவிட்டால் 24 மணிநேரத்தில் காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்படும் என்று பகிரங்க சவால் விடுத்தது மத்திய பிரதேச பாஜக. ஆனால் பாஜகவின் 2 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அத்துடன் தங்கள் தாய்வீடான காங்கிரஸுக்கு நாங்கள் திரும்புகிறோம் என்றும் அந்த எம்.எல்.ஏக்கள் அறிவித்தனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்து போனது பாஜக.
தங்களால் மட்டுமே பிற கட்சி எம்.எல்.ஏக்களை வளைக்க முடியும் என்கிற இறுமாப்புடன் பல மாநில அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது பாஜக. அந்த கட்சிக்கு சரியான பதிலடியை மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கொடுத்துள்ளது.
மேலுன் 4 பாஜக எம்.எல்.ஏக்கள் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக சாமியார் கம்ப்யூட்டர் பாபா இன்னொரு அணுகுண்டை வீசியுள்ளார். இதனால் காங்கிரஸை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக தயங்குகிறது.
கர்நாடகாவைப் போல தங்களது எம்.எல்.ஏக்கள் கூண்டோடு கட்சி தாவிவிடுவார்களோ என்பதாலே காங்கிரஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பம்முகிறதாம் பாஜக.