மோடியின் கல்வி சான்றிதழை வெளியிட்டடார் அமித்ஷா! போலி ஆவணம் என ஆம் ஆத்மி புகார்!!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி சான்றிதழை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று வெளியிட்டார். ஆனால் இந்த சான்றிதழ்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் இவை போலி ஆவணங்கள் எனவும் ஆம் ஆத்மி கட்சி புகார் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பட்டங்கள் பற்றி டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால், மத்திய தகவல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து இது குறித்த தகவல்களை அவருக்கு அளிக்குமாறு டெல்லி பல்கலைக்கழகத்துக்கும், குஜராத் பல்கலைக்கழகத்துக்கும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
அதில் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்று உள்ளார். குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் 1983-ம் ஆண்டு 62.3% பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மதிப்பெண்கள் விவரம்
ஐரோப்பிய அரசியல், இந்திய அரசியல் பகுப்பாய்வு மற்றும் அரசியல் உளவியல் அடங்கிய பாடங்கள் அடங்கிய 2 ஆண்டு பட்டப்படிப்பை முடித்து உள்ளார். பிரதமர் மோடி எம்.ஏ. முதலாம் ஆண்டில் 400 மதிப்பெண்களுக்கு 237 மதிப்பெண்கள் பெற்று உள்ளார். 2-வது ஆண்டு 400 மதிப்பெண்களுக்கு 262 மதிப்பெண்கள் பெற்று உள்ளார். 800 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்கள் பெற்று உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தும் பிரதமர் நரேந்திர மோடி பெற்ற கல்லூரி பட்டத்தின் விவரங்களை, தங்கள் கல்வி நிறுவன இணையதளத்தில் டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும் என்றும் கேஜ்ரிவால் கடிதம் எழுதினார்.

சான்றிதழ்கள் வெளியீடு
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிஏ, எம்ஏ பட்டப்படிப்பு சான்றிதழ்களை பாரதிய ஜனதா இன்று வெளியிட்டு உள்ளது. டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் மோடியின் பிஏ, எம்ஏ பட்டப்படிப்பு சான்றிதழ்களை வெளியிட்டனர்.
பிரதமர் மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து பி.ஏ. பட்டம் பெற்ற சான்றிதழையும், குஜராத் பல்கலைக்கழகத்தில் இருந்து எம்.ஏ. பட்டம் பெற்ற சான்றிதழையும் அமித் ஷா முன்வைத்தார். அப்போது பேசிய அமித்ஷா, பிரதமர் ஒருவரின் கல்வியறிவை தெளிவுபடுத்துவதற்காக நாங்கள் இந்த செய்தியாளர் சந்திப்பை கூட்டிஉள்ளோம் என்பது மிகவும் துரதிஷ்டவசமானது என்றார். மோடியின் படிப்பு தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிய ஆம் ஆத்மி தலைவர்களை அருண் ஜெட்லி கடுமையாக விமர்சனம் செய்தார்.

போலி ஆவணங்கள்- ஆம் ஆத்மி
ஆனால் இந்த சான்றிதழ்கள் வெளியிடப்பட்ட பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் அஸ்தோஷ், மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்கள் என்று கூறி வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் முரண்பாடுகள் நிறைந்துள்ளதாக கூறியுள்ளார். ஒரு சான்றிதழில் நரேந்திர 'குமார்' தாமோதரதாஸ் மோடி என்றும், மற்றொரு சான்றிதழில் நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆண்டுகளில் குழப்பம்
அதேபோல் மதிப்பெண் சான்றிதழ் ஒன்றில் 1977ம் ஆண்டு என்றும், மற்றொன்றில் 1978ம் ஆண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். போலியான ஆவணங்களை வெளியிட்டு அமித் ஷா மோசடி செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications