‘மிஷன் மகாராஷ்டிரா’: காங், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை இழுக்க பாஜக திட்டம்
மும்பை: மராட்டியமாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற பாஜக ‘மிஷன் மகாராஷ்டிரா' என்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் அதிக இடங்களை கைப்பற்ற முடியும் என்பது அக்கட்சியின் நம்பிக்கையாகும்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக - சிவசேனா இடையே கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பது இக்கட்சியினரின் விருப்பமாகும்.
இதற்காக உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிட்டிங் எம்.எல்.ஏக்களை வளைக்கத் திட்டுமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மக்களுக்குநன்கு அறிமுகமானவர்களுக்கு சீட் கொடுப்பதன் மூலம் எளிதாக வெல்லமுடியும் என்பது பாஜக, சிவசேனா கட்சிகளின் நம்பிக்கையாகும்.
மராட்டிய மாநில ஆட்சி
காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் தற்போது மராட்டிய மாநிலத்தில் நடந்து வருகிறது. 15 ஆண்டுகளாக பலமாக இருந்து வரும் இந்த கூட்டணி நடைபெற்ற லோக்சபா தேர்தலில் 48 தொகுதிகளில் 6 இடங்களை மட்டும வென்றது.
லோக்சபா தேர்தலில் வெற்றி
அதே சமயம் பாஜக சிவசேனா கூட்டணி 42 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது. பாஜக -சிவசேனா கூட்டணி காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை முறியடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
சட்டசபை தேர்தலில் வெற்றி
மராட்டிய மாநில சட்டசபை தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இதிலும் பா.ஜனதா சிவசேனா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
நம்பிக்கை தரும் கருத்துக்கணிப்புகள்
மராட்டிய மாநிலத்தில் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு தேவையான 145 இடங்களுக்கு அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு
இந்த கூட்டணி 248 இடங்கள் வரை பெறவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கோபிநாத் முண்டே மறைவு
மராட்டிய மாநிலத்தில் கோபிநாத் முண்டே, பா.ஜனதாவின் பிரபலமான முக்கிய தலைவராக இருந்து வந்தார். மத்திய அமைச்சராக பதவி ஏற்ற இவர் சமீபத்தில் மரணம் அடைந்தது அந்த கட்சி மேலிடத்தை வருத்தம் அடையச் செய்துள்ளது.
அனைத்து தரப்பு மக்களிடமும் சமயமாக பழகிய அவரால் பாஜகவிற்கு அதிக அளவில் ஓட்டுகள் கிடைத்தன. அவரது மறைவு பாஜகவிற்கு சிறிது பின்னடையை ஏற்படுத்தி உள்ளது.
ராஜ்தாக்கரே முட்டுக்கட்டை
இது தவிர மராட்டிய நவநிர்மான சேனா தலைவர் ராஜ்தாக்ரே தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலில் களம் இறங்க திட்டமிட்டுள்ளார்.
பாஜக - சிவசேனா
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் பா.ஜனதா-சிவசேனா கூட்டணியின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. இது போன்ற பிரச்சினைகள் இருந்தாலும், பாஜக-சிவசேனா கூட்டணியே அதிக இடங்களைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மிஷன் மகராஷ்டிரா
எனவேதான் மிஷன் மகாராஷ்டிரா என்ற திட்டத்தை பாஜக - சிவசேனா கூட்டணி கையில் எடுத்துள்ளது. சிட்டிங் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களாக உள்ளவர்களை பாஜக வசம் இழுப்பதன் மூலம் அதிக இடங்களை வெல்லமுடியும் என்பது பாஜகவின் நம்பிக்கை. இந்த திட்டத்தைத் தெரிந்த காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தவிப்பில் உள்ளது.