மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் ஆட்சி அதிகாரத்திற்காக ஏங்குகிறது பாஜக: சோனியா குற்றச்சாட்டு
பெங்களூர்: நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ கவலைப்படாமல் ஆட்சி அதிகாரத்திற்காக மட்டுமே பாஜக ஏங்குகிறது என குற்றம் சாட்டியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி.
கர்நாடக மாநிலம் குல்பர்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி.
அப்போது அவர் கூறியதாவது:-
பயன் தரும் திட்டங்கள்....
கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் உணவு பாதுகாப்பு சட்டம், தகவல் பெறும் உரிமை சட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம் உள்பட மக்களுக்கு பயன் அளிக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
பாஜகவின் சதித்திட்டம்....
உங்களுக்காக பணியாற்றுகிறவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும். ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பா.ஜனதா செயல்படுகிறது.ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் குறிப்பாக பா.ஜனதா சதித்திட்டம் உட்பட எதையும் செய்ய தயாராக இருக்கிறது.
மதவாதம் மூலம் அரசியல் லாபம்....
அந்த கட்சியிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். மதவாதம் செய்து அதன் மூலமாகவே அரசியல் லாபம் தேடிக்கொள்ளும் கட்சியிடம் இருந்து நாட்டுக்கு எந்த பயனும் ஏற்படாது. அக்கட்சி மக்களிடம் விஷத்தை விதைக்கிறது.
ஒளிமயமான எதிர்காலத்திற்கு....
ஆட்சி அதிகாரத்திற்காக காங்கிரஸ் ஏங்கவில்லை. ஆனால் நாட்டை பற்றியும், மக்களை பற்றியும் கவலை அடைகிறது.உங்களின் ஒளிமயமான எதிர்காலம் பற்றி காங்கிரஸ் கவலைப்படுகிறது. அதனால் காங்கிரசுக்கு மீண்டும் ஆதரவு தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.