மத வன்முறை தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு: ஜெயலலிதாவுக்கு பாஜக பாராட்டு

மாநில அரசின் அதிகாரங்களை பறிக்க வகை செய்யும் மத்திய அரசின் மதவன்முறை தடுப்பு சட்ட மசோதாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தாமல் இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சிப்பது ஜனநாயக விரோதம் என்றும் அவர் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான அருண்ஜெட்லி கூறி இருப்பதாவது:
‘நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலைக் கருத்தில் கொண்டு வகுப்புவாத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துவதாகவும், பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களை பிறப்பு அடையாளங்கள் அடிப்படையில் வேறுபடுத்திக்காட்டுவதாகவும் இந்த மசோதா அமைந்துள்ளது.
இந்த மசோதா குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் ஆலோசனை நடத்தப்படவில்லை. சோனியாகாந்தி தலைமையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேசிய ஒருமைப்பாடு கவுன்சில் கூட்டத்தில் இந்த மசோதா முன்மொழியப்பட்டது. இந்த மசோதாவுக்கு அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதி மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதால், இந்த மசோதா மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிப்பதாக அமைந்துள்ளது. அரசியல் சட்டத்தின் கூட்டாட்சி அமைப்பை அழிப்பதாக இந்த மசோதா அமைந்துள்ளதாக, கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களின் முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
தற்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதி இருப்பதன் மூலம் இந்த பிரச்சினையில் பொது விவாதத்தை தொடங்கி வைத்து இருப்பது பாராட்டுக்கு உரியது. அவருடைய கருத்துகள் நியாயமாகவும் பொருத்தமாகவும் உள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications