அவுரங்கசீப் கல்லறையை குறிவைத்த பாஜக-இடிக்கப் போவதாக பாஜக எம்எல்ஏ மிரட்டல்- மத்திய அமைச்சர் எதிர்ப்பு
மும்பை: முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் கல்லறையை இடித்துத் தள்ளுவோம் என்று தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ. ராஜாசிங் பேசியிருப்பது புதிய சர்ச்சையாகி இருக்கிறது. பாஜக எம்.எல்.ஏ. ராஜாசிங்கின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கண்டனம் தெரிவித்துள்ளார்.
முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் கல்லறை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது. மகாராஷ்டிராவின் குல்தாபாத்தில் உள்ள இந்த கல்லறையைத்தான் தற்போது பாஜக மற்றும் சங் பரிவார அமைப்புகள் குறிவைத்துள்ளன.

இது தொடர்பாக அரசு நிர்வாகத்தில் கோரிக்கை மனுக்களைக் கொடுத்துள்ள ஹிந்துத்துவா அமைப்புகள், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளன. மேலும் தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ. ராஜாசிங், அவுரங்கசீப் கல்லறையை இடித்துத் தள்ளுவோம் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து தற்போது அவுரங்கசீப் கல்லறை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் குல்தாபாத் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில் அவுரங்கசீப் கல்லறையை இடிப்பதற்கு மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராம்தாஸ் அத்வாலே கூறுகையில், முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் கொடூரமானவர்தான்; மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகனை படுகொலை செய்தவர்தான். ஆனால் மராத்தியர்களின் பேரரசை அவுரங்கசீப்பால் கைப்பற்ற முடியாமல் போனது.
அவுரங்கசீப்பின் கல்லறை மகாராஷ்டிராவின் குல்தாபாத்தில்தான் உள்ளது. இந்த கல்லறை இத்தனை நூற்றாண்டுகளாக இருக்கிறது; அவுரங்கசீப்பின் தவறான நடவடிக்கைகளை நினைவூட்டக் கூடியதாகவும் இந்த கல்லறையைப் பார்க்கலாம். அதே நேரத்தில் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசுவது எல்லாம் தேவையற்றது என்றார்.
முன்னதாக மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூடணி அரசை அவுரங்கசீப்பின் ஆட்சியை விட மோசம் என உத்தவ் தாக்கரே சிவசேனா கடுமையாக விமர்சித்திருந்தது; அதேபோல மகாராஷ்டிரா சட்டசபையில் அவுரங்கசீப்பை சமாஜ்வாதி எம்.எல்.ஏ. புகழ்ந்தும் பேசியிருந்தார். இதனையடுத்து அவுரங்கசீப் கல்லறையை இடித்து தள்ளுவோம் என பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications