ராஜ்யசபா சீட் கொடுத்து மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வளைக்க ஸ்கெட்ச்- ஆந்திராவில் பாஜகவின் செம்ம வியூகம்!
அமராவதி: ஆந்திரா சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் அம்மாநிலத்தில் வலுவாக காலுன்றுவதற்கு தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியை மீண்டும் அரசியல் களத்துக்கு கொண்டு வருவதற்கு பாஜக படுதீவிரமாக முயற்சிக்கிறதாம். சிரஞ்சீவிக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து பாஜகவில் குடும்பத்துடன் இணைய வைக்க பேச்சுவார்த்தைகள் ஜரூராக நடந்து வருகிறதாம்.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆந்திராவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. தென்னிந்திய திரை உலகில் கொடி கட்டிப் பறக்கும் சிரஞ்சீவி 2008-ம் ஆண்டு பிரஜா ராஜ்ஜியம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி தேசிய கட்சிகளை தெறிக்கவிட்டார். 2009-ம் ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலில் மொத்தம் 294 இடங்களில் 18 இடங்களை பிரஜா ராஜ்ஜியம் கைப்பற்றியது. 16% வாக்குகளை சிரஞ்சீவி கட்சி பெற்றது. ஆனால் சிரஞ்சீவியால் தொடர்ந்து கட்சியை நடத்த முடியாமல் 2011-ல் காங்கிரஸில் கட்சியுடனேயே ஐக்கியமானார். மத்திய அமைச்சராகவும் சிரஞ்சீவி பதவி வகித்தார். பின்னர் ஒட்டுமொத்தமாக தீவிர அரசியலில் இருந்தே சிரஞ்சீவி ஒதுங்கிவிட்டார்.

சிரஞ்சீவியின் சகோதரர் நாகேந்திர பாபு, திரைப்பட தயாரிப்பாளர். மற்றொரு சகோதரர் பவன் கல்யாண், ஜனசேனா கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது. ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியுடனும் பவன் கல்யாண் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. சிரஞ்சீவி குடும்பத்தில் அல்லு அர்ஜூன், அல்லு சிரிஷ், வருண் தேஜ், நடிகை நிகாரிகா, சாய் தரம் தேஜ், வைஷ்ணவ் தேஜ் என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் உள்ளனர்.
இதனால் தற்போது பாஜகவின் கவனம் சிரஞ்சீவி பக்கம் திரும்பி இருக்கிறது. ஆந்திராவில் பாஜக என்ற கட்சியே இல்லை. 2019 தேர்தலில் நோட்டாவுக்கு கீழேதான் வாக்குகளே கிடைத்தன. ஆந்திராவில் பாஜக காலூன்ற வேண்டும் எனில் சிரஞ்சீவி போன்ற மெகா ஸ்டார் ஆதரவு தேவை என்பதால் இப்போது காய்களை நகர்த்தி வருகிறதாம். உத்தரப்பிரதேசத்தில் 10 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒன்றை சிரஞ்சீவிக்கு கொடுக்க பாஜக பேரம் பேசுகிறதாம். ராஜ்யசபா சீட் கொடுத்து சிரஞ்சீவியை பாஜகவுக்குள் கொண்டு வந்துவிட்டால் ஆந்திராவின் பெரும்பான்மை ஜாதிகளில் ஒன்றான காப்பு வாக்குகள் கிடைக்கும்; பாஜகவும் காலூன்றி விடும் என்பதுதான் டெல்லி மேலிடத்தின் கணக்காம். சிரஞ்சீவி மீண்டும் அரசியலில் கால் பதிப்பாரா? என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications