பாஜக பிரித்தாளும் சூழ்ச்சியை கடைபிடிக்கிறது: குலாம் நபி ஆசாத் தாக்கு
டெல்லி: இப்போது காங்கிரசை தாக்க, அம்பேத்கரை பாஜக பயன்படுத்துகிறது. பாஜக பிரித்தாளும் சூழ்ச்சியை கடைபிடிக்கிறது. காங்கிரஸ் அன்பை உருவாக்கிவந்தது, வெறுப்பு வளர்ப்பது காங்கிரசின் கொள்கை கிடையாது என ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
இந்திய அரசியலமைப்பு சாசனம் குறித்த சிறப்பு விவாதத்தை, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி துவக்கிவைத்து பேசினார். அருண் ஜெட்லியின் பேச்சுக்கு பதிலளி்க்கும் வகையில் குலாம் நபி ஆசாத் ராஜ்யசபாவில் கூறியதாவது:
அரசியமைப்பு சாசனத்தை நன்கு படித்து பார்த்தால், அது ஜவகர்லால் நேருவின் நோக்கங்களை கொண்டிருப்பது நன்கு தெரியும். ஆனால், நீங்கள் (பாஜக), நேருவின் பெயரை குறிப்பிடுவதேயில்லை. இதுதான் சகிப்பற்றத்தன்மை.
இன்று ஜெர்மனி பற்றியும், ஹிட்லர் பற்றியும் பேசுகிறீர்கள், ஆனால் நேரு பற்றி பேசுவதில்லை. நேருவை இருட்டடிப்பு செய்ய பாஜக முயல்கிறது. சமூக நலத்துறை அமைச்சகம், நோட்டிபிகேஷன் வெளியிடும் அளவுக்கு பலப்படுத்தியது யார்?
அந்த காலகட்டத்தில் அம்பேத்கர், கல்வியறிவு மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்தார். உயர் ஜாதியினரால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் அம்பேத்கர்.
இப்போது காங்கிரசை தாக்க, அம்பேத்கரை பாஜக பயன்படுத்துகிறது. பாஜக பிரித்தாளும் சூழ்ச்சியை கடைபிடிக்கிறது. காங்கிரஸ் அன்பை உருவாக்கிவந்தது, வெறுப்பு வளர்ப்பது காங்கிரசின் கொள்கை கிடையாது.