பவன் கல்யாண் எனும் ஒற்றை பலியாடு.. ஆந்திரா, தெலுங்கானாவில் ‘கமுக்கமாக’ 'பொலிவேட்டையாடும்’ பாஜக!
விசாகப்பட்டினம்: ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தம்மால் ஆட முடியாத ஆட்டங்களை 'பரிசோதனை எலி' அல்லது 'பலியாடு' போல சிக்கியிருக்கும் நடிகர் பவன் கல்யாண் மூலம் அட்டகாசமாக விளையாடி வருகிறது மத்தியில் ஆளும் பாஜக என்கின்றனர் அம்மாநில ஊடகவியலாளர்கள்.
நடிகர் சிரஞ்சீவிக்கு ஆந்திராவில் அலைமோதிய கூட்டமும் அவரது விஸ்வரூபமும் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. காலத்தின் கோலம் அவர் காங்கிரஸில் ஐக்கியமாகி அரசியலையே மறந்து பல ஆண்டுகளாகிப் போய்விட்டது. தமிழ்நாட்டில் நடிகர் விஜயகாந்த், பிரதான கட்சியான இன்றைய ஆளும் திமுகவை ஓரம்கட்டி எதிர்க்கட்சி தலைவரானவர். ஆனால் அரவணைத்து அரியாசனம் கொடுத்த அண்ணா திமுகவே, தேமுதிகவை பொலி போட்டது என்பது அரசியல் சரித்திரம். ஆம் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பாதான்!

அண்ணா திமுக: அதுவும் பாஜகவிடம் கூட்டணியில் சிக்கும் கட்சிகள் கதியை அண்மைகாலமாக ஒவ்வொரு மாநிலமாக அனுபவித்து வருகின்றன. இதனாலேயே பாஜகவிடம் கட்சியை 'அடகு வைக்க' பயந்து அலறுகின்றன பல மாநில அரசியல் கட்சிகள். இந்த பட்டியலில் கடைசியாக இணைந்திருப்பதும் தமிழ்நாட்டின் அதிமுகதான். ஆளை விட்டால் போதும்.. ஒட்டும் இல்லை .. உறவும் இல்லை.. 2024-லும் கூட்டணி இல்லை.. 2026- சட்டசபை தேர்தலிலும் நீ யாரோ.. நான் யாரோ என ஒதுங்கி ஓடிவிட்டது அண்ணா திமுக.
பவன் கல்யாண்: இப்போது ஆந்திரா, தெலுங்கானாவில் பாஜகவிடம் வசமாக சிக்கியிருப்பவர்தான் நடிகர் பவன் கல்யாண். ஜனசேனா எனும் கட்சியை தொடங்கி எப்படியாவது பிரகாசித்துவிட வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு மாநில அரசியல் தலைவர்களும் மக்களை கவர என்னவெல்லாம் செய்தார்களோ- அத்தனை யுக்திகளையும் கையில் எடுத்து விளையாடிப் பார்க்கிறார். ஆந்திராவைப் பொறுத்தவரையில் ஆடுவதற்கு களமே இல்லாத நிலையில் பாஜக. தெலுங்கானாவைப் பொறுத்தவரையில் எங்க ஆடித்தான் பார்ப்போம் என்கிற நிலையில்தான் பாஜக.
ஆந்திராவில் பாஜக வியூகம்: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சித்தது. அங்கும் தெலுங்குதேசத்திடம் 60 தொகுதிகளை தர முடியுமா? என எக்குதப்பாக பாஜக தலைமை பேரம் பேச, அவரோ கூட்டணியே தேவை இல்லை என ஒதுங்கிவிட்டார். இப்போது பவன் கல்யாண் சிக்கிவிட்டார். பவன் கல்யாண் மூலமாக தெலுங்குதேசத்திடம் 30 தொகுதிகளை கேட்க சொல்லி இருக்கிறது டெல்லி பாஜக மேலிடம். பவனும் பாஜக ஏதேனும் வலுவாக செய்து தரும் என்ற நம்பிக்கையில் 30 தொகுதியை கேட்டுக் கொண்டிருக்கிறார் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு. இன்னொரு பக்கம் தெலுங்குதேசத்திடம் 30 தொகுதியை கேட்டு வாங்கி பாஜகவும் போட்டியிட திட்டமிடுகிறது. இதன் மூலம் பாஜக தாம் பெற விரும்பிய 60 தொகுதியை தெலுங்குதேசத்திடம் பெற முடியும் என நம்புகிறது.
தெலுங்கானாவில் காங்கிரஸ் வாக்குகள் சிதறடிப்பு: தெலுங்கானாவில் தற்போது சட்டசபை தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. பிஆர் எஸ், காங்கிரஸ் இடையேதான் இங்கு கடும் போட்டி நிலவுகிறது. ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் பாஜகவும் தலைகாட்டி வருகிறது. பாஜகவின் இப்போதைய ஒற்றை இலக்கு காங்கிரஸ் வாக்குகளை எப்படி எல்லாம் சிதறடிப்பது என்பதுதான். அதனால் பவன் கல்யாண் கட்சியை தெலுங்கானாவில் களமிறக்கி காங்கிரஸ் பக்கம் போகக் கூடிய வாக்குகளை அல்லு சில்லாக உடைக்கலாம் என நினைக்கிறது. தெலுங்கானாவில் கம்மா நாயுடுகள் பெருமளவு பாஜகவுக்கு எதிராக/ காங்கிரஸுக்கு ஆதரவாக இருக்கின்றனர். இதனை உடைக்க- அதாவது கம்மா வாக்குகளை சிதற வைக்க பவன் கல்யாண் எனும் பலியாட்டை களமிறக்குகிறதாம் பாஜக. இது புரிந்தோ புரியாமலோ, பாஜகவின் தேர்தல் பசிக்கு இரையாகிக் கொண்டே இருக்கிறார் பவன் கல்யாண் என்கின்றனர் தெலுங்கு மொழி ஊடகவியலாளர்கள்.












Click it and Unblock the Notifications