சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் - உயிரிழந்த 7 சி.ஆர்.பி.எப். வீரர்களில் தமிழர் ஒருவரும் பலி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவடா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 7 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரும் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தண்டேவடா வனப்பகுதி மாவோயிஸ்டுகளின் கை ஓங்கியுள்ள பகுதி. இப்பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் முகாமிட்டு மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

தண்டேவடாவின் மலெவரா பகுதியில் சி.ஆர்.பி.எப். வாகனம் சென்றபோது மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர் மாவோயிஸ்டுகள். இதில் அந்த வாகனத்தில் இருந்த 7 வீரர்களும் பலியாகினர்.
இது குறித்து தண்டேவடா எஸ்.பி. கே காஷ்யப் கூறுகையில், சி.ஆர்.பி.எப்.-ன் 230வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்களே வாகனத்தில் சென்றனர். அவர்கள் அனைவருமே இத்தாக்குதலில் பலியாகிவிட்டனர் என்றார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மாவோயிஸ்டுகளைத் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பலியான வீரர்களின் உடல்கள் அடையளம் காணப்பட்டு வருகிறது. இதில் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த விஜயராஜ் என்ற வீரரும் பலியாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications