மேற்கு வங்கம்: பர்தவானில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு- 2 பெண்கள் காயம்
கொல்கத்தா: மேற்குவங்கத்தின் பர்தவான் மாவட்டத்தில் இன்று காலையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்வா பெகுன்கோலா கிராமத்தில் பயன்பாடற்று கிடந்த வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததில் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்துள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த பெண்களை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அந்த வீட்டிற்குள் வெடிகுண்டுகள் வந்தது எப்படி என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தடயவியல் துறை அதிகாரிகள் வெடித்த குண்டுகளில் இருந்து சிதறிய பொருட்களை சேகரித்து வருகின்றனர்.
தொடரும் சம்பவங்கள்
பர்தவான் மாவட்டத்தில் அடிக்கடி இதுபோன்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பர்த்வான் மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக ஜமாத் உல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாத குழுவினரை வங்கதேசத்தில் போலீசார் கைது செய்தனர்.
பட்டாசு ஆலையில் தீ
இதே போல சில தினங்களுக்கு முன்ன மேற்கு மிட்னாபூர் மாவட்டம் பிங்லா என்ற இடத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. பெரும்பாலான பணியாளர்கள் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றுவிட்ட நிலையில், அங்கிருந்த சிலர் தீயில் சிக்கிக்கொண்டனர். இவர்களில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பட்டாசு ஆலை இயங்கி வந்த வீட்டின் உரிமையாளரை கைது செய்துள்ளனர். சட்டவிரோதமாக அந்த வீட்டில் பட்டாசு தயாரிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

60 குண்டுகள் கண்டெடுப்பு
சில மாதங்களுக்கு முன்னர் பர்தவான் மாவட்டத்தில் சிறுண்டி கிராமத்தில் சக்திவாய்ந்த 60 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் அவற்றை செயலிழக்க செய்தனர்.












Click it and Unblock the Notifications