தொடரும் பேரவலம்.. உ.பி.யில் இருந்து கங்கையில் மிதந்துசென்ற கொரோனா சடலங்கள்.. மேற்கு வங்கத்தில் தகனம்
கொல்கத்தா: உத்தரப் பிரதேசத்தில் தூக்கி வீசப்பட்ட பல கொரோனா சடலங்கள் கங்கையில் மிதந்து மேற்கு வங்கத்திற்கு வந்ததாகவும் அவை முறையாக தகனம் செய்யப்பட்டதாகவும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் ஏற்படுத்திய பாதிப்புகளை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின.
அதேபோல தினசரி உயிரிழப்புகளும் நான்காயிரத்தைத் தாண்டியது. கொரோனாவால் ஒருபுறமும், சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் மறுபுறமும் கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

கொரோனா உயிரிழப்பு
பல மாநிலங்களிலும் உண்மையான கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்பட்டதாகவும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் அல்லாத மரணங்களாக கணக்கு காட்டப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. உத்தரப் பிரதேசம், பீகார், கர்நாடகா எனப் பல மாநிலங்களிலும் வழக்கமாக ஏற்படும் உயிரிழப்புகளைவிட இந்த ஆண்டு உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளது.

கங்கை நதி
நாட்டில் கொரோனா ஏற்படுத்தியுள்ள தீவிர தன்மையை உணர்த்தும் வகையில் கடந்த மாதம் ஒரு பேரவலம் நிகழ்ந்தது. அதாவது உத்தரப் பிரதேசம் - பீகார் எல்லையில் உள்ள சவுசா என்ற நகரத்தில் ஓடும் கங்கை நதியில் 40க்கும் மேற்பட்ட சடலங்கள் சிதைந்து, அழுகிய நிலையில் கரை ஒதுங்கின. உத்தரப் பிரதேசத்தில் இதுபோல பல சடலங்கள் கங்கை நதியில் தூக்கி வீசப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

வீடியோ வைரல்
குறிப்பாக, சில வாரங்களுக்கு முன் உறவினர்களே கொரோனா சடலத்தை கங்கை நதியில் போடும் வீடியோவும் இணையத்தில் வைரலாகியிருந்தது. இதேபோல உத்தரப் பிரதேசத்திலிருந்து பல கொரோனா சடலங்கள் மேற்கு வங்கத்திற்குக் கங்கை நதியில் மிதந்து வந்துள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி
இது குறித்து அவர் கூறுகையில், உத்தரப் பிரதேசத்திலிருந்து மேற்கு வங்கத்திற்குப் பல சடலங்கள் கங்கையில் மிதந்து வந்தன. மால்டா மாவட்டத்தில் கூட கங்கை நதியில் சில சடலங்கள் மிதந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சில சடலங்களுக்கு உரிய இறுதி மரியாதை செய்து தகனம் செய்தோம். உத்தரப் பிரதேசத்தின் இந்த செயலால் கங்கை நதியில் ஓடும் நீர் மாசடைந்துவிட்டது" என்று தெரிவித்தார்.

கங்கை நதி
கங்கை நதியானது உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் வழியாகப் பாய்ந்து கடைசியில் வங்கக் கடலில் கலக்கிறது. இந்து மதத்தில் மிக முக்கிய நதியாகக் கங்கை நதி கருதப்படுகிறது. கும்பமேளா முதல் இந்து மதத்தின் பல முக்கிய நிகழ்வுகள் கங்கை நதியில் தான் நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications