டெல்லி- லக்னோ சதாப்தி ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பீதியில் மூழ்கிய டெல்லி ரயில் நிலையம்
டெல்லி: இன்று அதிகாலை டெல்லி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பல ரயில்கள் தாமதமாக கிளம்பிச் சென்றன, சில ரயில்கள் வேறு ரயில் நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் டெல்லி-லக்னோ இடையேயான சதாப்தி எக்ஸ்பிரஸ் காசியாபாத்தில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
டெல்லியில் இருந்து லக்னோ செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடிக்கும் என்று டெல்லி போலீசாருக்கு இமெயில் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் இது குறித்து டெல்லி ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில் இது குறித்து மூத்த ரயில்வே அதிகாரி நீரஜ் குமார் கூறுகையில்,
சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் இன்று காலை 6.23 மணிக்கு எங்களுக்கு தகவல் அளித்தனர். ஆனால் அந்த ரயில் காலை 6.10 மணிக்கே கிளம்பிச் சென்றுவிட்டது. இதையடுத்து ரயிலை காசியாபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தி பயணிகளை கீழே இறக்கிவிட்டு சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன. சோதனையில் ரயிலில் வெடிகுண்டு இல்லை என்பது தெரிந்த பிறகு 7.40 மணிக்கு ரயில் கிளம்பிச் சென்றது என்றார்.
டெல்லி ரயில் நிலையத்திலும் சோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்களில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு கிளம்பிச் சென்றன.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதை அடுத்து டெல்லி மற்றும் பிற அண்டை மாநிலங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.