திருப்பதி: ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் ஆன்லைன் விற்பனை தொடங்கியது
திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் இன்று முதல் ஆன்லைனில் ரூ. 300-க்கு டிக்கெட் எடுத்து விரைவு தரிசனம் செய்யும் முறையை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய திருப்பதி தேவஸ்தான உயர் நிர்வாக அதிகாரி எம்.ஜி கோபால், ஆன்லைனில் 300 ரூபாய் சிறப்பு டிக்கெட் எடுக்கும் பக்தர்கள் டிக்கெட் எடுத்த 7 நாட்கள் கழித்து திருப்பதி வந்து சாமி தரிசனம் செய்யலாம். இன்று புக்கிங் செய்யப்பட்ட டிக்கெட் மூலம் 27ம் தேதி தரிசனம் செய்யலாம்

குறிப்பிட்ட நேரத்தில் இருந்து 2 மணி நேரத்துக்கு முன்பாக திருப்பதி கோவிலுக்கு வந்தால் போதுமானது. இந்த புதிய முறையில் முதல் கட்டமாக 5000 டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
முன்பதிவு செய்த டிக்கெட்டை இரு பிரதி ஜெராக்ஸ் எடுத்து வரவேண்டும். ஒரிஜினல் அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்து கொண்டு வரவேண்டும்.
12 வயதுக்கு உட்பட்டவர்களின் வயது சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை மாற்றவோ, ரத்து செய்து கொள்ளவோ முடியாது. படிப்படியாக தினமும் 18,000 டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் ரூ. 50 கட்டண டிக்கெட்டுகள் தினமும் 7000 வரை ஆன்லைனில் வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். டிக்கெட்டுகளை www.tirumala.org என்ற இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications