சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்த பிரிட்டிஷ் உளவாளிகள்... அசோக் கெலாட் கடும் தாக்கு
ஜெய்ப்பூர்: சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த பிரிட்டிஷ் உளவாளிகள்தான், விடுதலைக்குப் போராடி சிறை சென்ற காங்கிரஸ் பாரம்பரியம் குறித்து விமர்சிக்கின்றனர் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சாடியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 135-வது ஆண்டு தொடக்க விழா ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் முதல்வர் அசோக் கெலாட் பேசியதாவது:
நமது தேசத்தின் அரசியல் சாசனம் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகி உள்ளது. ஜனநாயக குரல்களை ஒடுக்குவதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது.

மோடி விமர்சனம்
காங்கிரஸ் பேரியக்கத்தின் பாரம்பரியம் என்பது பெருமைக்குரியது. ஒட்டுமொத்த தேசமும் காங்கிரஸின் பாரம்பரியத்தையும் தியாகத்தையும் போற்றுகிறது. ஆனல் நமது பிரதமர், காங்கிரஸின் பாரம்பரியத்தையும் பண்டித ஜவஹர்லால் நேருவின் பாரம்பரியத்தையும் விமர்சிக்கின்றார்..

உயிரை தியாகம் செய்த நேரு பரம்பரை
தேசத்தின் விடுதலைக்காக சிறை சென்றவர்கள் நேருவின் பரம்பரையினர். முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் தேசதுக்காக உயிரையே நீத்தவர்கள். அதுதான் நேருவின் பாரம்பரியம்.

பிரிட்டிஷ் உளவாளிகள்
பிரதமர் மோடியின் சித்தாந்தத்தை பேசியவர்கள் சுதந்திரப் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் உளவாளிகளாக செயல்பட்டனர். அவர்கள்தான் இன்றைக்கு காங்கிரஸின் பாரம்பரியம் குறித்து பேசுகிறார்கள். இது அவமானகரமானது.

நாடு எங்கே போகிறது?
ஜனநாயகத்தின் அத்தனை அம்சங்களும் இன்று நிர்மூலமாக்கப்பட்டு வருகின்றன. நீதித்துறை, தேர்தல் ஆணையம், சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை அனைத்து துறைகளுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின், பிரதமர் மோடி அலுவலகத்தின் ஒப்புதல் இல்லாமல் ஒரு நடவடிக்கையையும் இந்த துறைகள் மேற்கொள்ள முடியாது. அப்படியானால் இந்த தேசம் எங்கே போய் கொண்டிருக்கிறது?
இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.












Click it and Unblock the Notifications