சிட்டிங் எம்.பி.யான கணவரை எதிர்த்து சுயேட்சையாக தேர்தலில் குதிக்கும் மனைவி
முசாபர்நகர்: முசாபர்நகர் லோக்சபா தொகுதியில் தற்போதைய எம்பியாக உள்ள தனது கணவர் காதிரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார் அவரது மனைவி சாகிதா.
முசாபர்நகர் தொகுதி எம்.பி காதிர் ராணா. இவர் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். காதிரின் மனைவி பெயர் சாகிதா பேகம். வரும் ஏப்ரல் மாதம் 10 தேதி நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் காதிரை போட்டியிட வைக்க மேலிடம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் அதிரடியாக தனது கணவர் எம்.பி.யாக உள்ள தொகுதியில் அவருக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் சாகிதா. முன்னதாக இம்மாதம் 22ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய காதிர் முடிவு செய்திருந்தார்.
காதிர் கடந்த 2007ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியிலிருந்து விலகி, ராஷ்ட்ரிய லோக்தாலில் இணைந்தார். பின்னர் 2009ம் ஆண்டு அக்கட்சியிலிருந்தும் விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். முசாபர் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக இவர் மீது குற்றம் சாட்டப் பட்டது குறிப்பிடத்தக்கது.