கேன் தண்ணீர், விபூதி, தவிடு - தமிழக கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி வரி குறைப்பு
20 லிட்டர் தண்ணீர் கேன் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது. சர்க்கரை மிட்டாய், நுன்னூட்ட சத்துக்கள் விபூதி, தவிடு உள்ளிட்ட 49 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: மத்திய பொது பட்ஜெட் இன்னும் சில வாரங்களில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் 20 லிட்டர் கேன் தண்ணீர், விபூதி உள்ளிட்ட 49 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த ஜூலை 1ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதன் பிறகு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் அவ்வப்போது பல நகரங்களில் நடைபெற்று வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் குவஹாத்தியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 178 பொருட்களுக்கு 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைத்தனர். குஜராத் தேர்தலுக்காக இந்த வரி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னதாக
டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டியில் ரியல் எஸ்டேட் தொழிலையும் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் ரியல் எஸ்டேட் துறையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர தமிழக அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதே நேரத்தில் தவிடு, விபூதி, கேன் தண்ணீர்,அலுமினிய பாத்திரங்கள், பொழுது போக்கு பூங்காக்களின் டிக்கெட்டுகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்றும் ஜெயக்குமார் அந்த கூட்டத்தில் வலியுறுத்தினார்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விபூதி, சர்க்கரை மிட்டாய், விபூதி, 20 லிட்டர் கேன் தண்ணீர் உள்பட 49 பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். இந்த வரி குறைப்பு ஜனவரி 25ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் உறுப்பினரும், உத்தரகாண்ட் மாநில நிதியமைச்சருமான பிரகாஷ் பாந்த், 29 கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முற்றிலும் விலக்களிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 60 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறினார். ரியல் எஸ்டேட்டை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மாநிலங்களின் நிதி ஆதாரத்தை விட்டு தரமுடியாது என்றும் கூறினார்.
அலுமினியப் பொருட்களுக்கான வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பதுடன், விவசாயப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார். பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி வரம்பில் கொண்டு வருவது குறித்து முடிவு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.