தமிழகம், கேரளா, கர்நாடகாவில் பதுங்கி இருக்கும் புர்த்வான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள்
டெல்லி: புர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தென்னிந்தியாவுக்கு சென்று அங்கு தோட்ட வேலை மற்றும் கட்டிட வேலை செய்து வருகிறார்கள் என்று தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. முக்கிய குற்றவாளியான கௌசர் கூட வங்கதேசத்திற்கு செல்லவில்லை. அவரும் இந்தியாவில் தான் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் புர்த்வானில் வெடிகுண்டுச் சம்பவத்தில் தொடர்புடைய வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத்துல் முஜாஹிதீன் அமைப்பினரின் திட்டங்கள் தகர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அமைப்பைச் சேர்ந்த 6 ஆயிரம் வங்கதேசத்து நபர்கள் தென்னிந்தியாவுக்கு சென்று அங்கு தோட்ட வேலை, கட்டிட வேலை செய்து வருகிறார்களாம். அவர்கள் தாங்கள் அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்து வேலை வாங்கியுள்ளனர்.
அவர்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளதால் அவர்களை கண்டுபிடிப்பது எளிது அல்ல என்று தேசிய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. ஜமாத்துல் முஜாஹிதீன் அமைப்புக்கு அல் உம்மா அமைப்பு ஆதரவு அளித்துள்ளதால் தீவிரவாதிகள் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் கூலி வேலை செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. இதனால் உள்ளூர் போலீசாரை அணுகி அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து வந்தவர்களை கண்டறிய உதவி செய்யுமாறு தேசிய புலனாய்வுத் துறை கேட்க உள்ளது.
ஜமாத்துல் முஜாஹிதீன், அல் உம்மா அமைப்புகளுக்கு சிமி அமைப்புடன் பல ஆண்டுகளாக தொடர்பு உள்ளது. தென்னிந்தியாவுக்கு சென்றுள்ள தீவிரவாதிகள் பல ஆண்டுகள் பொறுமையாக இருந்து போலீசாரின் கெடுபிடி அடங்கிய பிறகு தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக அவர்கள் 2005ம் ஆண்டு தாக்குதல் நடத்திவிட்டு 6 ஆண்டுகள் பொறுமையாக காத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications