அந்நிய செலாவணி மோசடி வழக்கு: லியாகத் அலியின் ரூ.16.60கோடி சொத்துக்கள் முடக்கம்
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கைதான லியாகத் அலியின் ரூ.16.60கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
டெல்லி: அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கைதான லியாகத் அலியின் ரூ.16.60கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை லியாகத் அலியின் சொத்துக்களை முடக்கியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளில் நூற்றுக்கணக்கான போலி நிறுவனங்களின் பெயரில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று வந்தது தெரிய வந்தது. இதுத் தொடர்பாக பெங்களூரிலும், சென்னையிலும் கடந்த ஏப்ரல் மாதம் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மண்ணடி மூர் தெருவை சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சென்னையில் போலியான பெயரில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் நடத்தி வந்தார். துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பல கோடி மதிப்புள்ள மின்னணு சாதனங்களை சரக்கு விமானங்களிலும், கப்பல்கள் மூலமாகவும் இறக்குமதி செய்ததாக போலியான ஆவணங்கள் தயாரித்து, பணப்பரிமாற்றம் செய்தார்.
லியாகத் மோசடியாக தனது பான் அட்டையில் சிறு திருத்தங்கள் செய்தும், அதே போல ஓட்டுநர் உரிமத்திலும் மாற்றங்கள் செய்தும் பல்வேறு வங்கிகளில் கணக்குகளைத் துவங்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் பல்வேறு வங்கிகளில் ரூ.20 கோடி வரை வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட இருந்ததையும் அமலாக்கத்துறை கண்டறிந்ததுள்ளது.
இதுகுறித்து தகவல் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு கிடைக்கவே, நடவடிக்கையில் இறங்கியது சுங்கத்துறை. விசாரணையில் லியாகத் அலியின் நிறுவனங்கள் போலியானவை என்று தெரிய வந்தது. மேலும், மின்னணு சாதனங்களை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது போல் போலியான ஆவணங்கள் மூலம் கணக்கில் வராத ஹவாலா பணம் வெளி நாடுகளுக்கு கடத்தப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் இந்த வழக்கை மத்திய அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்தனர். கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி வெளிநாட்டிற்கு விமான மூலம் தப்பி செல்ல முயன்ற லியாகத் அலியை சென்னை மண்டல மத்திய அமலாக்கத்துறை சிறப்பு தனிப்படை அமைத்து கைது செய்தனர். பின்னர், அவர் நீதிமன்ற உத்தரப்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்தியன் வங்கியின் மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெற்றது தெரிய வந்தது. மின்னணு சாதனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகக் கூறி 24 போலி ஆவணங்கள் மூலம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் கணக்கு தொடங்கி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, போலி நிறுவனத்தின் பெயரில் இந்தியன் வங்கி கணக்கில் லியாகத் அலி வைத்திருந்த சுமார் 1.75 கோடி ரூபாயை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். மேலும், லியாகத் அலி போலி நிறுவனங்களின் பெயரில் தொடங்கி வைத்துள்ள வங்கிக் கணக்குகளைப் பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் லியாகத் அலியின் ரூ.16.60கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் லியாகத் அலி, முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் அன்பழகன் ஆகியோரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications