பெங்களூரில் பிரபல தொழிலதிபர் சுட்டுக்கொலை! தொழில் போட்டியால் வெறிச்செயல்?
பெங்களூர்: தொழிலதிபர் ஒருவர் மூன்று பேரால் சுற்றி வளைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரின், ஆர்.டி.நகர் பகுதியை சேர்ந்தவர், சுரேந்திர குமார். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் 20 வருடங்களுக்கும் மேலாக பெங்களூரில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். பல்வேறு தொழில்கள் செய்து வந்த இவர், 8 வருடங்கள் முன்பு பருச்சுரி குளோபல் பவுண்டேசன் என்ற அமைப்பை தொடங்கினர். மத நிகழ்வுகள் மட்டுமின்றி, ஏழை எளிய மாணவர்களுக்கு நிதி உதவி செய்யும் பணியையும் இவரது அறக்கட்டளை மேற்கொண்டுவந்தது.

கோலார், ஒசூர் போன்ற தெலுங்கர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இவர் மிகவும் பிரபலமாகவும் இருந்தார். இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில், சுரேந்திர குமார் அவரது வீட்டின் முன்பு காரில் சென்று இறங்கியபோது, 3 பேர் சுற்றி வளைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
படுகாயமடைந்த சுரேந்திர குமார், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தொழில் போட்டிதான் இக்கொலைக்கு காரணம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு மேற்கொண்டு தகவல்களை வெளியிடுவதாக போலீசார் கூறியுள்ளனர்.
சுரேந்திர குமாரிடம் மேனேஜராக வேலை பார்த்த ஒரு நபர்தான் முக்கிய குற்றவாளி என கூறப்படுகிறது. கர்நாடக அமைச்சர் ரமேஷ் குமாருக்கும், சுரேந்திர குமாருக்கும் நடுவே மோதல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications