ஜம்முவில் தீவிரவாதிகள் தாக்குதல்.. 44 ராணுவ வீரர்கள் பலி… மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது
ஜம்முகாஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை இன்று அவசரமாக கூடுகிறது.
ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 2,500 பேர், 78 வாகனங்களில் பலத்த பாதுகாப்போடு ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவந்திபுரா பகுதியில் வெடிகுண்டு நிரப்பிய காரில் வந்த தீவிர வாதிகள் திடீரென ராணுவ வாகனத்தை குறி வைத்து தாக்குதலை நடத்தினர். சற்றும் எதிர்பாராத நேரத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலால் நிலைகுலைந்த ராணுவ வீரர்கள், என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
அடுத்தடுத்த தாக்குதல் சம்பவங்களினால், ராணுவ வாகனத்தில் பயணித்தவர்களில் பலர் கொல்லப்பட்டனர். பலி எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. ராணுவ வீரர்களின் உடல்பாகங்கள் ஆங்காங்கே சிதறியதால், அந்த இடமே போர்க்களம் போன்று காட்சியளித்தது. மேலும் தாக்குதலில் படுகாயமடைந்த பல ராணுவ வீரர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இந் நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்க பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் இன்று கூடுகிறது.
இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை இந்த தாக்குதல் ஏற்படுத்தி உள்ள நிலையில், மீண்டும் ஒரு துல்லிய தாக்குதலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.