அமைச்சர்கள் குழுக்கள் கலைப்பு: இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உருவாக்கிய 30 அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழு ( EGoMs- Empowered Group of Ministers) மற்றும் அமைச்சர்கள் குழுக்களை (GoMs-Group of Ministers) கலைப்பதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்படுகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உருவாக்கிய 30 அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழு மற்றும் அமைச்சர்கள் குழுக்கள் கலைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் 31ம் தேதி அறவித்தார். இதையடுத்து மத்திய அமைச்சகங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
9 அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழு மற்றும் 21 அமைச்சர்கள் குழுக்கள் கலைக்கப்படுவதன் மூலம் அமைச்சரவைக்கு முக்கிய முடிவுகள் எடுப்பது மற்றும்கூடுதல் பொறுப்பு வந்து சேரும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த குழுக்களிடம் நிலுவையில் இருந்த விவகாரங்கள் குறித்து அமைச்சகங்களும், துறைகளும் உரிய முடிவு எடுக்கும்.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழு கலைப்புக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தான் பெரும்பாலான அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழுக்களுக்கு தலைவராக இருந்தார். ஊழல், மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்சனை, கேஸ் விலை நிர்ணயம் உள்ளிட்டவை குறித்து முடிவு எடுக்கவே இந்த குழுக்கள் உருவாக்கப்பட்டன.
அமைச்சர்கள் குழுக்கள் அளிக்கும் பரிந்துரைகள் மத்திய அமைச்சரவையிடம் சமர்பிக்கப்பட்டு ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.