மே.வங்கம்: சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள்- சி.பி.ஐ. விசாரணைக்கு கொல்கத்தா ஹைகோர்ட் உத்தரவு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலுக்கு பின் நடைபெற்ற வன்முறைகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற கிரிமினல் வழக்குகளை சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்கவும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. அம்மாநில முதல்வராக மமதா பானர்ஜி மீண்டும் பதவியேற்றார்.
சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

கொல்கத்தா ஹைகோர்ட்
மேலும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலும் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. இதனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜேஷ் பிந்தால், நீதிபதிகள் ஐபி முகர்ஜி, ஹரீஷ் தாண்டன் உள்ளிட்டோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இவ்வழக்கில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்திய 50 பக்க ஆவணங்களும் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டன. அந்த அறிக்கையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு மீது சரமாரி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

சிபிஐ விசாரிக்க உத்தரவு
இந்த வழக்கில் ஏற்கனவே, தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் நடந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் அனைத்தையும் சி.பி.ஐ. விசாரணை நடத்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தலுக்குப் பின் நடைபெற்ற அனைத்து கிரிமினல் வழக்குகளையும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை நடத்த வேண்டும் என்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

மே.வங்க அரசு ஆட்சேபனை நிராகரிப்பு
மேலும் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் வழங்குவதை மேற்கு வங்க அரசு உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அத்துடன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை பாரபட்சமாக இருக்கிறது என்கிற மேற்கு வங்க அரசின் ஆட்சேபனையையும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

6 வாரங்களில் அறிக்கை
சிபிஐ மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழு ஆகியவை தங்களது விசாரணை அறிக்கையை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது கொல்கத்தா உயர்நீதிமன்றம். இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications