கொரோனா பரவலுக்கு மத்தியில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவா? தேர்தல் ஆணையத்தை விளாசி தள்ளிய நீதிபதி
கொல்கத்தா: கொரோனா பரவலுக்கு மத்தியில் வங்கத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றால் அது கொரோனா பரவலை அதிகரிக்கும் என்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இதில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதற்குத் தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அதிகாரம் இல்லை என்றும், எனவே இது தொடர்பாக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் கடும் அதிருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், தேர்தல் ஆணையத்திற்குச் செயல்பட அதிகாரம் இருந்தும் செயல்படாமல் இருப்பதாகவும் விமர்சித்தார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தல்: 6 வது கட்ட வாக்குப்பதிவு நிறைவு - 79.04% வாக்குகள் பதிவு
இது தொடர்பாக மேலும் நீதிபதி கூறுகையில், கொரோனா காலங்களில் தேர்தல் நடத்த என்ன நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் வெறும் அறிவிப்பை வெளியிட்டுவி்ட்டு அமைதியாக உள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு விதிமுறைகளைச் செயல்படுத்தும் அதிகாரம் உள்ளது" என்றார்.
மேலும், தேர்தல் ஆணையம் டி.என். சேஷன் காலத்தில் அவர் செய்த பத்தில் ஒரு பங்கைக்கூடச் செய்யவில்லை என்றும் விமர்சித்தனர். இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரித்தார்.
கொரோனா விதிகளை அமல்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நாளை பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.