ராஜ்யசபாவில் நிலுவையில் இருக்கும் இன்சூரன்ஸ் மசோதா லோக்சபாவில் அறிமுகமா?- எதிர்க்கட்சிகள் சாடல்
டெல்லி: ராஜ்யசபாவில் நிலுவையில் இருக்கும் இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை லோக்சபாவில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன.
இன்சூரன்ஸ் சட்டம், 1938; பொது இன்சூரன்ஸ் வர்த்தக (தேசியமயம்) சட்டம் 1972 மற்றும் இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச்சட்டம், 1999 ஆகிய மூன்று சட்டங்களிலும் திருத்தம் செய்யும் விதமாக இன்சூரன்ஸ் சட்டங்கள் (திருத்த) மசோதா, 2015ஐ லோக்சபாவில் மத்திய அரசு நேற்று அறிமுகம் செய்தது.
ஏற்கெனவே இன்சூரன்ஸ் துறையில் 49% அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் இந்த சட்டத்திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிலுவையில் இருக்கிறது. ராஜ்யசபாவில் இம்மசோதா நிறைவேறாது என்ற நிலையில் இன்சூரன்ஸ் அவசர சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து அவசர சட்டத் திருத்தத்தை சட்டமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியாக வேண்டிய நெருக்கடியில் லோக்சபாவில் நேற்று இன்சூரன்ஸ் திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் ராஜ்யசபாவில் இன்சூரன்ஸ் திருத்த மசோதா நிலுவையில் இருக்கும் நிலையிலேயே லோக்சபாவில் இம்மசோதாவை அறிமுகம் செய்தது என்பது நாடாளுமன்றத்தின் விதிகளை மீறுவதாகும் என்று இடதுசாரிகள் உட்பட எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.
இந்த மசோதா ராஜ்யசபாவில் நிலுவையில் இருந்த நிலையில் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டு லோக்சபாவில் தாக்கல் செய்ய கடந்த வாரம் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியை எதிர்க்கட்சிகள் முறியடித்தன. இதனை நேற்று லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின.
இதனைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் திருத்த மசோதாவை தாக்கல் செய்வதா இல்லையா என்பது குறித்து குரல் வாக்கெடுப்பு நடத்த லோக்சபா சபாநாயகர் உத்தரவிட்டார். குரல் வாக்கெடுப்பில் அரசுக்கு சாதகமாக 131 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் பதிவாகின. இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மசோதாவை அறிமுகம் செய்தார்.
ஆனால் இடதுசாரி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இம்மசோதாவை அறிமுகம் செய்வதற்கு எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லோக்சபா குழு தலைவர் பி.கருணாகரன், ராஜ்யசபாவில் இன்னும் எந்தத்தீர்வும் சொல்லப்படாத ஒரு மசோதாவை லோக்சபாவில் அறிமுகம் செய்வதற்கு அரசாங்கத்துக்கு எந்த உரிமையும் இல்லை; அதிகாரமும் இல்லை என்றார்.
திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சௌகதாராய், இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இதுவரை ஒரு சபையில் நிலுவையில் உள்ள ஒரு மசோதா இன்னொரு சபையில் அறிமுகம் செய்யப்பட்டது இல்லை எனக்குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, அவசரச்சட்டம் கொண்டுவந்துவிட்டதால் ஏற்கெனவே இந்த மசோதா சட்டமாகிவிட்டது; அதனால்தான் லோக்சபாவில் தாக்கல் செய்திருக்கிறோம் என்றார். இதனை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை.
இதனிடையே இந்த விவகாரம் ராஜ்யசபாவிலும் எதிரொலித்தது. ராஜ்யசபாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீத்தாராம் யெச்சூரி, லோக்சபாவில் தனக்குள்ள பெரும்பான்மையை முற்றிலும் தவறாக அரசு பயன்படுத்துகிறது; ராஜ்யசபாவை எந்தவிதத்திலும் மதிக்காமல் அதன் மாண்புகளை சீர்குலைக்கும் விதமாக மத்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது. இன்சூரன்ஸ் மசோதா இன்னும் ராஜ்யசபாவின் சொத்தாகவே இருக்கிறது. ராஜ்யசபாவின் சொத்தாக இருக்கும் ஒரு பொருளை அரசு வலிந்து பறித்துச் சென்றிருக்கிறது; இது ராஜ்யசபாவின் உரிமைகள் மீதான ஆக்கிரமிப்பே ஆகும் என்றார்.
இதே கேள்வியை காங்கிரசின் ஆனந்த் சர்மா, சமாஜ்வாதிக் கட்சியின் நரேஷ் அகர்வால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தெரிக் ஓ பிரய்யன் உள்ளிட்டோரும் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து தாம் ஆராய்வதாக சபையின் துணைத் தலைவராக இருந்த குரியன் உறுதியளித்திருக்கிறார்.