70 வருஷத்துல நீங்க என்ன செஞ்சீங்க.. நாங்க செஞ்சதை அப்பறம் கேளுங்க.. மோடி கேள்வி
நாட்டிற்கு காங்கிரஸ் 70 ஆண்டுகளாக என்ன செய்தது என்று முதலில் கூறட்டும், பின்னர் நான்கரை ஆண்டுகால பாஜக ஆட்சி பற்றி கேட்கட்டும் என்று பிரதமர் மோடி பேசினார்
Recommended Video
ஜெய்ப்பூர்: நாட்டிற்கு காங்கிரஸ் 70 ஆண்டுகளாக என்ன செய்தது என்று முதலில் கூறட்டும், பின்னர் நான்கரை ஆண்டுகால பாஜக ஆட்சி பற்றி கேட்கட்டும் என்று ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசினார்.
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான், 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலங்களில் வருகிற 7-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த 2 மாநிலங்களிலும் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்தநிலையில், ராஜஸ்தான் மாநிலம் சுமேர்பூரில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தனது கட்சித் தலைவர்களின் பெயர்கள் கூட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தெரியாது.
அவர் ஆட்சிக்கு வந்து என்ன செய்யப் போவார் என்பதை கற்பனை செய்து பாருங்கள். பிரபல விவசாயி மற்றும் ஜாட் சமூகத்தின் தலைவருமான கும்பராமை கும்பகரன் என ராகுல் காந்தி குறிப்பிடுகிறார்.
விவசாயிகளுக்காக ராஜஸ்தானின் பார்மேர் நகரில் நம்தார் என்ற மிகப் பெரிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மூலம் விவசாயிகள் பெரும் லாபம் அடைந்து வருகின்றனர். அது இங்கு இருப்பவர்களுக்கு தெரியும். ஆனால் காங்கிரஸ் அதிரும் பொய் பிரச்சாரம் செய்து தவறான தகவல்களை கூறி வருகிறது.
கடந்த 70 ஆண்டுகளில் சமுதாயத்தில் காங்கிரஸ் பல பிளவுகளை ஏற்படுத்தி விட்டது. அப்புறம் எப்படி மக்கள் நலனில் அக்கறை இருக்கும். முதலில் அவர்கள் 70 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்பதை சொல்லட்டும், அதன் பின் 4.5 ஆண்டுகளில் நாங்கள் என்ன செய்தோம் என்பதை கேட்கட்டும் என்றார்.
மேலும், சோனியா, ராகுல் காந்தி ஆகியோரின் வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்ய அரசுக்கு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்ததையும் குறிப்பிட்டார்.