3,000 கன அடி நீர் திறக்க காவிரி மேற்பார்வை குழு உத்தரவு.. பீதியில் பெங்களூர்.. போலீஸ் குவிப்பு
பெங்களூர்: காவிரி மேற்பார்வை குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்ற நிலையிலும், உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் காவிரி வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையிலும், பெங்களூரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரியிலிருந்து தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீரை வரும் 20ம் தேதிவரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 12ம் தேதி தனது உத்தரவில் கூறியது. உத்தரவு வெளியான சில மணி நேரத்தில் பெங்களூரில் பெரும் கலவரம் வெடித்தது. தமிழகத்தை சேர்ந்த பஸ்கள், லாரிகள் சாரை, சாரையாக தீக்கிரையாக்கப்பட்டன.

இந்நிலையில், வழக்கு விசாரணை மீண்டும் நாளை உச்சநீதிமன்றத்தில் வர உள்ளது. அப்போது கர்நாடகா திறந்துவிட்ட நீரின் அளவு கணக்கீடு செய்யப்படும். தமிழகம் சார்பில் கூடுதல் நீர் கேட்கப்படும். கர்நாடகாவோ நீர் திறக்க முடியாது என வாதிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்.
ஒருவேளை, மீண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் இதற்காகவே காத்திருக்கும் சில கன்னட அமைப்புகள் கடந்த திங்கள்கிழமையை போல மீண்டும் ஒரு வன்முறையை பெங்களூரில் அரங்கேற்ற வாய்ப்பிருப்பதாக கர்நாடக உளவுத்துறை அரசுக்கு எச்சரித்துள்ளது.

எனவே இன்று முதலே பெங்களூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பிறப்பித்த 144 தடையுத்தரவு வரும் 25ம் தேதி நள்ளிரவு வரை நீடிக்க உள்ளதால், பெங்களூரில் போராட்டங்கள் நடத்த தடை உள்ளது. எனவே யாராவது போராட்டம் நடத்தினால் அந்த இடத்திலேயே கைது செய்ய போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் இன்று எடுக்கப்பட்ட முடிவுப்படி, தமிழகத்திற்கு வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் 3,000 கன அடி தண்ணீரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கூட்டம் நடைபெற்றதால், பெங்களூரில் இன்றே காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கன்னட அமைப்பினர் கலவரத்தில் ஈடுபடக்கூடும் என முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காவிரி மேற்பார்வை குழு உத்தரவால் கர்நாடகாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications